சிகிச்சை முடிந்து விஜயகாந்த் சிங்கம் போல எழுந்து வருவார்.. பிரேமலதா பேச்சு
விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ளதாக பிரேமலதா தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ளதாகவும், மீண்டும், சிங்கம்போல் அவர் எழுந்து வருவார் என்றும் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தேமுதிக என்றாலே பிரேமலதா விஜயகாந்த் பெயர் சொல்லாமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு ஆரம்பத்தில் இருந்தே அக்கட்சியின் ஒவ்வொரு அசைவிலும் பிரேமலதாவின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்பட்டது.

பொருளாளர் பிரேமலதா
குறிப்பாக அவரது பிரச்சார பேச்சுக்கள் மக்களிடம் அதிகமாக பேசப்பட்டது. அதனால்தான், தேமுதிக-வில் இதுவரை கட்சி பதவி எதையும் வகிக்காத பிரேமலதா விஜயகாந்துக்கு முதன் முறையாக பொருளாளர் பதவி சமீபத்தில் கொடுக்கப்பட்டது.

விஜயகாந்த் உடல்நிலை
இந்நிலையில், அக்கட்சியின் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் தேமுதிக தலைமை கழகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பொருளாளர் பிரேமலதா தலைமை தாங்கினார். அப்போது தேமுதிகவின் வளர்ச்சி பணிகள், மீடூ, மற்றும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா விரிவாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

சர்ச்சை செய்ய கூடாது
இப்போது எல்லோரும் மீடூ பற்றி பேசுகிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் நெருப்பாக இருந்தால் மீடூ எப்படி வரும். ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழைய முடியும்? இந்த மீ டூ இயக்கத்தை பெண்கள் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர அதை வைத்து சர்ச்சை செய்யக்கூடாது.

சிங்கம்போல வருவார்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருக்கிறார். இன்னும் 15 நாளில் அந்த வெளிநாடு பயணம் அமையவிருக்கிறது. சிகிச்சை முடிந்து அவர் மீண்டும் சிங்கம் போல் எழுந்து வருவார். ஆனால் திமுக, அதிமுகவுக்கு மாற்று கட்சி தேமுதிக தான். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்" என்றார்.












Click it and Unblock the Notifications