அண்ணாமலைக்கு எதிராக கூடிய பத்திரிகையாளர்கள்.. சென்னையில் போராட்டம்.. வலுக்கும் எதிர்ப்பு!
சென்னை; பத்திரிகையாளர்களை கண்ணியக்குறைவாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கண்டித்து சென்னையில் பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது.
Recommended Video
பிரதமர் மோடியின் சென்னை வருகை குறித்தும், அதில் முதல்வர் ஸ்டாலின் பேசியது குறித்தும் பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். முதல்வர் ஸ்டாலினின் உரையை விமர்சனம் செய்து அண்ணாமலை இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
இதில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அண்ணாமலை செய்தியாளர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்ணாமலை
சாலை நடுவில் பாஜக கொடிகளை நட்டது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதில் அளிக்காமல்... அண்ணாமலை அந்த செய்தியாளர்களை தாக்கி பேசினார். உங்களுக்கு அறிவாலயத்தில் இருந்து வர வேண்டிய 200 ரூபாய் வந்துவிடும் என்று அண்ணாமலை விமர்சனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர் கேள்வி எழுப்ப எழுப்ப.. உங்களுக்கு 1000 ரூபாய் வந்துவிடும்.. 2000 ரூபாய் வந்துவிடும் என்று கூறிக்கொண்டே சென்றார் அண்ணாமலை. அண்ணாமலையின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் பல பத்திரிகையாளர்கள் அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்தனர்.

கடும் விமர்சனம்
மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம், சென்னை பத்திரிக்கையாளர் மன்றம், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அண்ணாமலைக்கு எதிராக விமர்சனம் வைத்தன. இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, நான் செய்தியாளர்களை மதிக்கிறேன். நீங்கள் என்னை புறக்கணிக்க வேண்டும் என்றால் புறக்கணிக்கலாம். ஆனால் நீங்கள் தர்மபடி நடந்து கொள்கிறீர்களா என்று பார்த்துக்கொள்ளுங்கள் என்று விமர்சனம் வைத்து இருந்தார்.

மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்
இதற்கு பதில் அளித்த மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், நியாயமான கேள்வியை எழுப்பிய பத்திரிகையாளரை அவமானப்படுத்தும் வகையிலும் அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்ட நீங்கள் பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்கும் வரை உங்களை ஊடகங்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் நாங்கள் உறுதியோடு இருக்கிறோம். பத்திரிகையாளர் மீது உங்களுக்கு அன்பும் பாசமும் உள்ளது என்று கூறியுள்ளீர்கள். நன்றி ஆமாம். நீங்கள் கூறியதுபோல ஒரு நாணயத்தில் இரண்டு பக்கம் உள்ளது. மரியாதை கொடுப்பதை பொறுத்துதான் அதை திரும்ப எதிர்பார்க்க முடியும். செய்தியாளர்களை அணுகிய விதம் தான், பலரை மேதாவியாகவும், சிலரை கோமாளியாகவும் மாற்றியது தமிழக அரசியல் களம் என்பதை இந்த நேரத்தில் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம், என்று கூறியது.

போராட்டம்
அதோடு அண்ணாமலைக்கு எதிராக பல்வேறு பத்திரிக்கையாளர் சங்கங்களை போராட்டங்களை அறிவித்தன. இந்த நிலையில் இன்று மாலை பத்திரிகையாளர்களை கண்ணியக்குறைவாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கண்டித்து சென்னையில் பல்வேறு பத்திரிகையாளர்கள் சங்கங்கள் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. சேப்பாக்கத்தில் சென்னை பத்திரிகையாளர் வளாகம் முன்பாக இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

வலுக்கும் எதிர்ப்பு
மூத்த பத்திரிகையாளர்கள் பலர் அண்ணாமலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கருத்துரிமையை,. கேள்வி கேட்கும் உரிமையை நசுக்க கூடாது, செய்தியாளர்களை அவமதிக்க கூடாது, அரசியல் அழுத்தங்களை தர கூடாது, நாவடக்கம் வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி சென்னையில் பல்வேறு பத்திரிகையாளர்கள் சங்கங்கள் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. அண்ணாமலை தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications