“நான் சொல்லவே இல்ல..” விக்னேஷின் தாயார் பிரேமா, தம்பி லோகேஷ் மீது மருத்துவர் போலீசில் புகார்!
சென்னை: கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷின் தாய் பிரேமா மற்றும் சகோதரர் லோகேஷ் ஆகியோர் மீது மருத்துவர் மோசஸ், சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். விக்னேஷின் தாயாரும், சகோதரரும் அவதூறு பரப்புவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி, ஒரு இளைஞரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விக்னேஷ் என்பவரால் கத்தியால் குத்தப்பட்டு, ரத்த வெள்ளத்தில் சரிந்த டாக்டர் பாலாஜி, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாயாருக்கு அந்த மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. அப்போது அவருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் மற்றும் 3 பேர் நேற்று மருத்துவர் பாலாஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தான் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருத்துவரைக் குத்தியுள்ளார் விக்னேஷ்.
மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷை, மருத்துவமனை அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் ஊழியர்கள் மடக்கிப் பிடித்த நிலையில் கிண்டி போலீசார் வந்து கைது செய்தனர். விக்னேஷ் மீது கிண்டி போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சைதாப்பேட்டை பெருநகர 9வது குற்றவியல் நீதிமன்றத்தில் விக்னேஷ்வரன் ஆஜர்படுத்தப்பட்டார். விக்னேஷை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் மீது கத்தியால் குத்திய விவகாரத்தில் புதிய திருப்பமாக, கக்தியால் குத்திய விக்னேஷின் தாயார் பிரேமா மற்றும் சகோதரர் லோகேஷ் மீது தனியார் மருத்துவமனை மருத்துவர் மோசஸ் போலீசில் புகார் அளித்துள்ளார். தன் மீது அவதூறு பரப்பி வருவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் மருத்துவர் ஜேக்கின் மோசஸ் புகார் அளித்துள்ளார்.
கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி சரியாக சிகிச்சை அளிக்கவில்லை, அவருக்கு அங்கு வழங்கப்பட்ட மருந்தினால் தான் நோயாளி உடல்நிலை மோசமடைந்தது என நான் கூறியதாக தவறான கருத்துகளை பேட்டிகளில் தெரிவித்து வருகின்றனர் என மருத்துவர் ஜேக்கின் மோசஸ் கூறியுள்ளார்.
நுரையீரல் தொடர்பான பிரச்சனைக்கு 3 முறை என்னிடம் பிரேமா சிகிச்சை எடுத்துள்ளார். எனது அறிவுறுத்தலின் பேரிலேயே கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பிரேமா அனுமதிக்கப்பட்டார். என்னைப் பற்றி அவதூறு பரப்பி வரும் பிரேமா மற்றும் லோகேஷ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர் ஜேக்கின் மோசஸ் புகாரில் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications