ராகுல் "ராஜீவாக" முயற்சித்தது போதும்.. இனி பிரியங்கா ஏன் "இந்திரா" ஆக கூடாது... பரபரக்கும் காங்கிரஸ்

பிரியங்கா காந்தியிடம் பொறுப்பை ஒப்படைக்கலாமே என்ற பேச்சு எழுந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அக்கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படும் என இன்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், சோனியாவே மேலும் 6 மாசத்துக்கு பொறுப்பை தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும், வேறு ஒரு தலைவரையும் நியமிக்க சோனியா காந்தி சொல்லி உள்ள நிலையில், அந்த பொறுப்பு பிரியங்கா காந்திக்கு செல்லுமா என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இந்தியாவின் இன்றைய சூழலில் சோனியா காந்தியின் பங்கு மிகவும் முக்கியமானது.. அவர் இல்லாத காங்கிரஸை கற்பனை செய்யகூட முடியவில்லை.

அன்று சோனியா என்ற அச்சாணியில்தான் பரந்து விரிந்த பாரத தேசம் சுழன்று கொண்டிருந்தது.. அப்போது நாட்டில் எந்த பகுதியிலும் மதக்கலவரங்கள் இல்லை, அரசியல் வன்முறைகள் இல்லை.. கூர்க்காக்கள், சீக்கியர்கள், அசாமியர்கள் போன்ற பிரிவினைவாதிகளின் வன்முறை சம்பவங்கள் இல்லை.. இப்போது போல இந்தி மொழி போராட்டங்கள் இல்லை.

 எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள்

மத்திய அரசுக்குள்ளே - காங்கிரஸ் கட்சிக்குள்ளேயோ - தோழமை கட்சிக்குள்ளேயோ எந்த மோதலும் இல்லை.. எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு முறை இடையூறுகள் செய்து, நாடாளுமன்றத்தை முடக்கினாலும், அவர்களை சோனியா கடிந்து பேசியதில்லை.. தனிப்பட்ட முறையில் யாரையும் மனம் புண்படும்படி விமர்சித்ததும் இல்லை... எதிர்க்கட்சி தலைவர்களாக இருந்தாலும் அவர்களிடம் நட்போடு பேசும் நற்குணமும் அவருக்கு உண்டு.

 அதிரடிகள்

அதிரடிகள்

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்படாமல், பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்காமல், அவர்களை மதித்து போற்றும் மாண்பும் சோனியாவுக்கு உண்டு. அன்றைய பிரதமர் மன்மோகனுக்கு முழு சுதந்திரத்தை தந்தார்.. யாராவது ஊழலில் சிக்கினால், தயவுதாட்சண்யம் இல்லாமல் பதவியில் இருந்து தூக்கி எறிந்தார். முக்கியமாக, இவர் மீது இன்னமும் ஊழலின் நிழல்கூட படியாமல் இருப்பதற்கு ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும்.. இவர்களை பயன்படுத்தி சிலர் ஆதாயம் அடைந்தார்களே தவிர, நேரு குடும்பத்தில் உள்ள யாருமே கோர்ட், வழக்கு, கைது, சிறை என்ற அவப்பெயருக்கு ஆளானதில்லை.

 உடல்நலம்

உடல்நலம்

ஆனால், 2011-ல்தான் சோனியாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனது... வெளிநாட்டு சிகிச்சைக்காக அமெரிக்காவும் சென்றார்.. வெளிநாட்டு சிகிச்சை என்றாலே அச்சமும், பயமும் நமக்கு தோன்றிவிடும்.. அண்ணா, எம்ஜிஆர் முதல் கவியரசு கண்ணதாசன் வரை வெளிநாட்டு சிகிச்சைகள் எதிர்பார்த்த பலன்களை தரவில்லை.. அதனால்தான் சோனியா காந்தி விஷயத்தில் அப்போதே பதட்டமானோம்.

 நெருக்கடிகள்

நெருக்கடிகள்

எப்போது இவர் அன்று வெளிநாடு போனாரோ அப்போதே இந்தியாவில் 2 பெரும் நெருக்கடிகளை நாடு சந்தித்தது. ஒன்று அன்னா ஹசாரே விவகாரம்.. மற்றொன்று பிரணாப் - சிதம்பரம் இடையே நடந்த உரசல்! சோனியா நாட்டில் இல்லாத நேரத்திலேயே, ஒரு பெரும் நெருக்கடியை தந்து மன்மோகன் அரசை கவிழ்த்து விடலாம் என்று பாஜக காய் நகர்த்தியது.

 எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள்

அதற்கு எடுப்பார் கைப்பிள்ளையாக கிடைத்தார் அன்னா ஹசாரே... கொக்கின் தலையில் வெண்ணையை வைத்த கதை என்பதை சில எதிர்க்கட்சிகள் அப்போது உணரவில்லை. சோனியா சிகிச்சையில் இருந்து திரும்பி வந்தவுடனேயே இந்த 2 பிரச்சனைகளை சரி செய்தார்.. எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பை அசால்ட்டாக தகர்த்தெறிந்தார். அப்பேர்ப்பேட்ட ஆளுமையும் திறமையும் மிக்க சோனியாவை உடல்நலம் அதிகமாகவே சோதித்து வருகிறது.

 ராகுல்

ராகுல்

இந்த சமயத்தில்தான் ராகுல் தீவிரமாக களமிறக்கப்பட்டார்.. ஆனால் , அதற்கு அவர் பொருத்தமானவராக இல்லை என்பதே அன்றைய - இன்றைய உண்மை.. அவர் இன்னும் முழுமையாக பக்குவப்படவில்லை.. அரைகுறையான மற்றும் அவசரமான விமர்சனங்களை அள்ளி வீசி வருகிறார்.. இப்போதாவது கொஞ்சம் பரவாயில்லை.. முன்பெல்லாம் ஒண்டிக்கு ஒண்டி வா என்ற பாணியில்தான் அரசியல் நடத்தினார்.

 முலாயம் சிங்

முலாயம் சிங்

குறிப்பாக, மாயாவதியையும், முலாயம் சிங்கையும் அனுசரித்து போயிருந்தால், உபியில் வலுவான வாக்குகள் தங்கியிருக்கும்.. ஆனால், தனி ஆவர்த்தனம் செய்ததுதான் மண்ணை கவ்வ ஆரம்பிக்க தொடங்கியது.. நேருவும், இந்தியாவும் பிறந்து வளர்ந்த காங்கிரஸ் கோட்டையான உபியில் படுதோல்வி அடைய காரணமாக இருந்ததே ராகுல்தான் என்பதை மறக்க முடியாது... ராகுலின் இந்த அணுகுமுறையை அன்றே சோனியா சரி செய்திருக்க வேண்டும்.

 நடவடிக்கை

நடவடிக்கை

அதேபோல, சீனியர்களை துச்சமென மதிப்பதும், முன்யோசனை இல்லாமல் நடவடிக்கைகளை எடுப்பதும் இவரது இயல்புகளாகிவிட்டன... எப்போதுமே சோனியாவுக்கு கருணாநிதி மீது அளவுகடந்த மரியாதையும், பாசமும் நிறைய உண்டு. ஆனால், கருணாநிதி உயிருடன் இருந்தபோது நிறைய முறை சென்னை வரும்போதெல்லாம் ராகுல்காந்தி, கருணாநிதியை சந்திக்காமலேயே சென்ற நிகழ்வுகளும் நடந்தது.

 அதிருப்திகள்

அதிருப்திகள்

இப்படி இருந்தால் இளைஞர் காங்கிரஸ்கார்கள் எப்படி கருணாநிதியை மதிப்பார்கள்? எப்படி தோழமை கொள்வார்கள் என்ற அறிவுரையை சோனியா அன்றே ராகுலுக்கு சொல்லி தந்திருக்க வேண்டும்.. அப்போது தவற விட்டதின்வினை, இப்போது சொந்த கட்சிக்குள்ளேயே சீனியர்கள் அதிருப்தி அடையும் நிலைமைக்கு சென்றுள்ளது.

 பேச்சுக்கள்

பேச்சுக்கள்

அதேசமயம், கடந்த வருடம் ராகுலின் சில செயல்பாடுகளை பாராட்டாமலும் இருக்க முடியாது.. அன்று அவையில் ராகுலின் பேச்சும், பிரதமரை நெருங்கி சென்று கட்டிப்பிடித்ததும் ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்தது.. அவர் பிரதமரை கட்டிப்பிடித்தார் என்பதற்காக மட்டுமல்ல அன்றைய உரையில் எதிர்க்கட்சியினரை அவர் திணறடித்தார் என்பதாலும்தான் அத்தகைய ஒரு ஈர்ப்பு அவர் மீது ஏற்பட்டது.

 ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ஆனால், லாக்டவுன் பிரச்சனையில் புலம் பெயர் தொழிலாளர்கள் விஷயத்தில் வீதிக்கு இறங்கி அவர்களுக்காக ராகுல் குரல் கொடுத்ததையும், உதவியதையும் மறக்க முடியாது.. இப்படி ஒருசில சமயங்களில் "நான் பப்பு இல்லை" என்பதை வெளிப்படுத்தினாலும், ராகுல் அதை உறுதிப்படுத்தவில்லை என்பதே நம் வருத்தம்.

 ராஜஸ்தான்

ராஜஸ்தான்

இன்று, தலைமை பொறுப்பு மாற்றப்படுமோ என்ற பேச்சு எழுந்துள்ளது.. ஒருவேளை இந்த பொறுப்பில் ராகுல் காந்தியை நியமனம் செய்வதாக முடிவானால், அவர் நிச்சயம் அரசியலில் இன்னும் பயிற்சி பெற வேண்டும், பக்குவமடைய வேண்டும் என்பதை ஆணித்தரமாக சொல்ல வேண்டி உள்ளது.. காரணம், ராஜஸ்தானில் பாஜகவின் காய் நகர்த்தல்களிலிருந்து காங்கிரஸ் அரசு தப்புமா என்ற ஒரு பேச்சு எழுந்து வரும் நிலையில், பாஜகவின் அடுத்த குறி சத்திஸ்கர் பக்கம் திரும்பி உள்ளது.

சாட்டையடிகள்

சாட்டையடிகள்

அதுமட்டுமல்ல,பல்வேறு மாநிலங்களில் நிலவும் சூழலில், பாஜகவின் அரசியல் நகர்வுகளுக்கு சரியான சாட்டையடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வைப்பது பெரிய சவாலாக உள்ளது.. ராகுலின் நம்பிக்கைக்குரிய, அடுத்த தலைமுறை தலைவர்களாக கருதப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியாவும், சச்சின் பைலட்டும்கூட கட்சிக்கு எதிராக திரும்பி நிற்பது வருத்தத்தை தருகிறது.

 சுய ஆய்வு

சுய ஆய்வு

அதனால், தற்போது கட்சி இருக்கும் நிலைமை பற்றி நேர்மையாக சுயஆய்வு செய்ய ஒட்டுமொத்த காங்கிரஸே தயார் ஆக வேண்டும் என்றுதான் நமக்கு சொல்ல தோன்றுகிறது.. காங்கிரஸ் கட்சியில் உள்ள இளைஞர்கள் நம்பிக்கையிழந்து கொண்டு வருகிறார்கள்.. அவர்களை நம்பிக்கையை மீட்டெடுக்க வலுவான தலைமை தேவை என்ற புள்ளியில் வந்து காங்கிரஸ் இன்று நின்றுள்ளது. நிலையான மற்றும் முழுநேரத் தலைவர் இல்லாததால், கட்சி திசைதெரியாமல் பயணப்பட ஆரம்பித்துவிட்டது.

 பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி

அதனால், பிரியங்காவிடம் முழு பொறுப்பை ஒப்படைக்கலாமா என்று சீனியர்கள் இனி யோசித்தால் நன்றாக இருக்கும்.. 4 நாளைக்கு முன்பு, "எங்கள் குடும்பத்தை சாராதவரே காங்கிரசுக்கு தலைமை தாங்க வேண்டும்" என்று பிரியங்கா ஒரு அதிர்ச்சி விஷயத்தை சொன்னாலும், அவரை களமிறக்க முன்முயற்சியை சீனியர்கள்தான் மேற்கொள்ள வேண்டும்.

 இந்திரா காந்தி

இந்திரா காந்தி

பாட்டியின் தோற்றமும், நிதானமும், பொறுமையும் ஒரு பிரதமர் பதவிக்கு தேவை.. அது பிரியங்காவிடம் நிறையவே உள்ளது... படு ஸ்மார்ட்டாக இருக்கிறார்.. இருவருக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகளும் உள்ளன... இந்திரா காந்தி மீது மக்களுக்கு ரொம்ப பிரியம் இருந்தது... சாமான்ய மக்களுடன் எளிதாக கலந்து பழகுவார்... அப்போது அவரது முகத்தில் ஒரு உறுதிப்பாடு மட்டுமல்ல.. பாசத்துக்குரியவராகவும் இருப்பார்.. அதேபோலதான் பிரியங்காவும்.. மக்களுடன் இணைகிறார்.. வேகமாக உரையாடும் திறன் உள்ளது.

Recommended Video

    Sonia Gandhi பதவி விலகலா? நாளை காரிய கமிட்டி கூட்டம் !
    பிரச்சாரங்கள்

    பிரச்சாரங்கள்

    ஆனால், இந்த காரணங்களால் மட்டும் அரசியல் கணக்குகள் மாறிவிடுமா? என்று சொல்லிவிட முடியாது... எனினும், வீறு கொண்டு புடைத்து வரும் பாஜகவுக்கு சம்மட்டி பதிலை தர பிரியங்காவால் நிச்சயம் முடியும்... பாஜகவை தோற்கடிக்கவும், மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியின் சமூக பிரச்சாரத்திற்கு மாற்றாக நிச்சயம் பிரியங்கா இருப்பார்.. குறைந்தபட்சம் கட்சிக்குள் மேலும் விரிசல் விழாமல் கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்.. இவரிடம் பொறுப்பை ஒப்படைத்தால், காங்கிரஸ் படுகுழியில் இருந்து சற்றே மீளும்... இல்லாவிட்டால் எதிர்காலத்தில் தறிகெட்ட காங்கிரஸாக மாறிவிடும் அபாயமும் உள்ளது என்பதே யதார்த்த உண்மை!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+