சொத்து பத்திரங்கள் குவியுது.. பத்திரப்பதிவு லேட்டா நடக்குதா? 150 சார் பதிவகங்களின் நிலைமை? கோரிக்கை
சென்னை: சார்பதிவாளர் அலுவலகத்தில், சொத்து பரிமாற்றங்களுக்கான பதிவு கட்டணம், பிற ஆவணங்களுக்கான பதிவு கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம் உள்ளிட்டவை வசூலிக்கப்படுகின்றன. மேலும், பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் நகல்களை வழங்குதல், ஆவணங்களை சரிபார்தல் போன்ற பணிகளையும் சார்பதிவாளர் அலுவலகங்கள் மேற்கொள்கின்றன. இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சார் பதிவாளர் அலுவலகங்களில் போதுமான சார் பதிவாளர் இல்லை என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது.
தமிழகத்தில், 585 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.. இந்த அலுவலகங்களுக்கு தினசரி, 1,000 பேருக்கு மேல் வந்து செல்கின்றனர். சொத்து பத்திரப்பதிவு மட்டுமல்லாது, நிறுவனங்கள் சார்ந்த ஆவண பதிவு பணிகளும் நடக்கின்றன.

சார் பதிவாளர் அலுவலகம்
இந்த பணிகளை மேற்கொள்வதற்காகவே, சார் பதிவாளர் அலுவலகங்களில், தலா ஒரு சார் பதிவாளர், 2 உதவியாளர்கள், ஒரு அலுவலக உதவியாளர், ஒரு எழுத்தர், ஒரு காவலர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன... அதேபோல, அதிக பத்திரங்கள் பதிவாகும் அலுவலகங்களில், இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படுத்தப்படும்.. இது தவிர, கணினி உதவியாளர் என ஒருவர், ஒப்பந்த பணியில் நியமிப்பர்.
ஆனால், பல இடங்களில் இந்த பணியிடம் முறையாக நிரப்பப்படவில்லை என்ற குற்றச்சாட்டு சமீபகாலமாகவே எழுந்து வருகிறது.. இதனால், சார் பதிவாளர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களை, தினக்கூலி அடிப்படையில் பணியமர்த்தி கொள்வதாகவும் கூறப்படுகிறது.
பெயிரா தலைவர் ஏற்கனவே விடுத்த கோரிக்கை
இதைத்தான் பெயிரா தன்னுடைய வருத்தத்தை கடந்த 2 மாதத்துக்கு முன்பு பதிவு செய்திருந்தது.. இதுகுறித்து அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்..
"சமீபகாலமாகவே சார் பதிவாளர் அலுவலகத்திற்கு, தினந்தோறும் ஒரு சார் பதிவாளர் வருகின்றார்கள்.. இதனால், அந்த ஆவணங்களின் தன்மை தெரியாமல், அனுபவம் இல்லாமல், உதவியாளர்களாக இருக்கக்கூடியவர்களை நியமிக்கப்பட கூடிய அவலம் உள்ளது. இதனால் பதிவு செய்வதற்காக செல்கின்ற பொதுமக்கள், தங்களுக்கான சேவைகளை முழுமையாக பெற முடியாமல் தங்கள் ஆவணங்களை பதிவு செய்ய இயலவில்லை..
தான்தோன்றித்தனமான செயல்பாடு
இதுபோக பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, சட்டதிட்டங்கள் புரியாமல், சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தாமல், ஆவணங்களை எல்லாம் தான்தோன்றித்தனமாக, பொத்தாம் பொதுவாக சில காரணங்களை சொல்லி நிராகரிக்கும் சூழல் இன்று ஏற்பட்டுள்ளது.. எனவே, பற்றாக்குறையாக உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில், கவனமாக பணியாற்றக்கூடிய, நல்ல அனுபவம் வாய்ந்த பணியாற்றக்கூடிய, பொதுமக்களுக்கு சரியான சேவையாற்றக்கூடிய, பொறுப்புள்ள சார் பதிவாளர் நிரந்தரமாக இருக்க வேண்டும்" என்றெல்லாம் அந்த கோரிக்கையில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், 150 அலுவலகங்களில், அரசு ஒப்புதல் அளித்த நிரந்தர பணியிடங்கள் அடிப்படையில் ஆட்கள் நியமிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் தரப்பிலிருந்தே மீண்டும் கிளம்பியிருக்கிறது..
சார் பதிவாளர் அல்லது பொறுப்பு சார் பதிவாளராக செயல்படும் ஒரு உதவியாளர் மட்டுமே உள்ளனராம்.. கணினி ஆப்பரேட்டரும் ஒப்பந்த ஊதியத்தில் பணிபுரிகிறார்.. மற்ற தேவைகளுக்கு, சார் பதிவாளர்களே தனியாக ஆட்களை அமர்த்திக் கொள்கின்றனர். இதன் அடிப்படையில், 150 சார் பதிவகங்கள், ஒரு நபர் அலுவலகங்களாக செயல்படுகின்றன. இதனால், பத்திரப்பதிவு பணிகள் தாமதமாவதாக பொது மக்கள் புகார்களை கூறுகிறார்களாம்.
அதிகாரிகள் நம்பிக்கை
இது குறித்து, பதிவுத்துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, "ஒரு நபர் சார் பதிவாளர்அலுவலகம் என்ற நிலையை மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால், வருவாய் குறைந்த பல ஊர்களில் பணிபுரிய சார்பதிவாளர்கள் விரும்பவில்லை. பற்றாக்குறைக்கு இதுவும் ஒரு காரணம்.
அதேபோல, குறிப்பிட்ட சில ஊர்களை அலுவலர்கள் தவிர்ப்பதும் இன்னொரு காரணமாகும். எனவே, காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்.. பல இடங்களில் காலாவதியான பணியிடங்களை நிரப்ப, அரசின் அனுமதி பெற வேண்டியுள்ளது" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications