நில விற்பனை.. சொத்து வாங்கறீங்களா? விரைவில் வருகிறது புதிய நடைமுறை.. மண்டல அளவிலேயே அதிரடி? சூப்பர்
சென்னை: பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை தமிழக பத்திரப்பதிவு துறை மேற்கொண்டு வரும்நிலையில், முக்கிய தகவல் ஒன்று வட்டமடித்து வருகிறது.
ஆன்லைனிலேயே நத்தம் இணையவழி பட்டா மாறுதல் செய்ய முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. நத்தம் நிலம் தொடர்பான விவரம் ஆன்லைன் மயமாகிவிட்டதால், வழிகாட்டி மதிப்பு விரைவில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
உரிமையாளர்கள்: மேலும், அரசு வழங்கிய பட்டா மற்றும் பத்திர அடிப்படையில், உரிமையாளர் முழுமையான உரிமைகளையும் இனி எளிதாக பெற முடியும் என்றும் நம்பப்படுகிறது.. இதையடுத்து, 1.42 கோடி நத்தம் நில ஆவணங்கள், தமிழகத்தில் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டிருப்பதாக நில அளவைத்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இதுகுறித்து, நில அளவைத் துறை இயக்குனர் பி.மதுசூதன் ரெட்டி, அனைத்து கலெக்டர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், "1.42 கோடி நத்தம் நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.. இந்த டிஜிட்டல் ஆவணங்கள், பல்வேறு கட்ட சரிபார்ப்புக்கு பின், தற்போது தமிழ்நிலம் தகவல் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. இ - சேவை இணையதளம் வாயிலாக, தமிழ்நிலம் தகவல் தொகுப்பில், நத்தம் நில ஆவணங்களை பொதுமக்கள் பார்க்கலாம்.
பட்டா மாறுதல்: இ - சேவை மையங்கள் வாயிலாக, நத்தம் நில பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பதிவு செய்யவும், உரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கிராம நிர்வாக அலுவலர் முதல் பல்வேறு நிலைகளில் உள்ள அலுவலர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய வழிகாட்டுதல்களை அலுவலர்கள் கடைபிடிப்பதை கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும்.
நத்தம் நில பட்டா மாறுதலுக்கு மக்கள், இ - சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்காக பொதுமக்களை தாலுகா அலுவலகங்களுக்கு வரும்படி அலைக்கழிக்கக் கூடாது" என்று கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
சொத்து விற்பனை: அதுபோலவே, சொத்து விற்பனையின்போதும், பொதுமக்களை அலைக்கழிக்க விடாதவாறு அவர்களின் வசதிக்காகவே இன்னொரு அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
அதாவது வழக்கமாக, சொத்து விற்பனையின்போது, வழிகாட்டி மதிப்பை குறிப்பிடாவிட்டால், அந்த பத்திரம் தனித்துறை கலெக்டர் விசாரணைக்கு அனுப்பப்படும். இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணை, இதுவரை சென்னை சாந்தோமில் உள்ள பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் நடந்து வந்தன.
நில மதிப்பு: ஆனால், தற்போது, மண்டல அலுவலகங்களில், இந்த விசாரணையை முடிக்க, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முடிவு செய்துள்ளாராம்.. இதற்கு காரணம், நில மதிப்பு நிர்ணயிப்பதில் ஏற்படும் பிரச்சனைகளில், மேல்முறையீடுகள் அதிகரித்து வருகின்றன. இந்த மனுக்கள் தொடர்பாக விசாரணை சென்னையில் நடப்பதால், சம்பந்தப்பட்டவர்கள் சென்னைக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறதாம்.
எனவே, பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்காகவே, மண்டல அளவில் விசாரணை நடத்த முயற்சி திட்டமிட்டு வருவதாகவும், இதற்கு பிறகே மற்ற மண்டலங்களிலும் இந்த விசாரணை மேற்கொள்ளப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications