சொத்து வரி உயர்வை அரசியலாக்க வேண்டாம்... முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் - அதிமுக வெளிநடப்பு
சொத்து வரி உயர்வு மனமுவந்து செய்யவில்லை என்று சட்டசபையில் முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இதனை அரசியலாக்க வேண்டாம் என்றும் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை: சொத்து வரி உயர்வு மனமுவந்து செய்யவில்லை என்று சட்டசபையில் முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். மாநில வளர்ச்சியில் எவ்வித அரசியலும் செய்யவேண்டாம் என்று அனைத்து கட்சிகளுக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். சொத்து வரி உயர்வு குறித்து முதல்வர் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து சட்டசபையில் இருந்து அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழகம் முழுவதும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. இது தொடர்பாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
துறை வாரியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 10-ம் தேதி வரை 22 நாட்கள் நடைபெற உள்ளது. சொத்து வரி உயர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
இந்த தீர்மானம் தொடர்பாக பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வரி உயர்வு மக்கள் மீது பெரும் சுமையை சுமத்தியுள்ளதாகவும், மத்திய அரசு சொத்துவரியை உயர்த்த எந்த அறிவிப்புகள் செய்யவில்லை என்று தெரிவித்தார். மேலும், அரசு உயர்த்திய சொத்து வரியை திரும்ப பெறவேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

செல்வப்பெருந்தகை
இதை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு உறுப்பினர், செல்வபெருந்தகை, இந்தியாவில் எல்லா மாநிலங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது வரிவிதிப்பு குறைவாக இருந்தாலும், சொத்துவரியை கொஞ்சம் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

எம்எல்ஏக்கள் பேச்சு
இதே போல பாமக, பாஜக, சிபிஎம், சிபிஐ, விசிக,மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சி பாரதம் போன்ற கட்சி உறுப்பினர்களும், பொதுமக்கள் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் உயர்வுபோன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அரசு சொத்துவரியை ரத்து செய்யவேண்டும் என்றும் வலியுத்தினர்.

கே.என். நேரு விளக்கம்
இதற்கு பதில் அளித்து பேசிய நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்தியாவில் எந்த மாநிலத்தில் இல்லாத அளவிற்கு நகர்புறத்தில் மக்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதே போல நகரத்தை நோக்கி மக்கள் வருகிறார்கள். எனவே தான் தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் நோக்கத்துடன் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என்றார். அதிமுக ஆட்சியில் நீங்கள் உயர்த்தினால் சரி, நாங்கள் உயர்த்தினால் தவறு என்பது எப்படி என்றும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அமைச்சர், நகர்புறத்தில் உள்ள 7786188 குடியிருப்புகளில் 58.48 வெறும் 25 சதவீதம் தான் வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த வரி உயர்வு என்பது உள்ளாட்சியை நடத்துவதற்குரிய காரணி தான் என்று அமைச்சர் நேரு தெரிவித்தார்.

முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்கம்
இதனையடுத்து சொத்து வரி உயர்வு ஏன் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்தார். மனமுவந்து வரியை உயர்த்தவில்லையென்றும், உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்துவதற்கு நிதி தேவைப்படுகிறது அதை கருத்தில் கொண்டே ஏழை எளிய மக்கள் பாதிக்காத வகையில் வரி உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும், மாநில வளர்ச்சியில் எவ்வித அரசியலும் செய்யவேண்டாம் என்று அனைத்து கட்சிகளுக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

அதிமுக வெளிநடப்பு
முதல்வர் மு.க ஸ்டாலின் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து அதிமுக பாஜக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி வெளிநடப்பு செய்த எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம் என முழக்கமிட்ட எம்எல்ஏக்கள் சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications