இந்தி திணிப்புக்கு எதிராக 24ம் தேதி போராட்டம்.. மீண்டும் களத்தில் குதித்த வைகோ!
சென்னை: மத்திய அரசின் இந்தித் திணிப்பைக் கண்டித்து, சென்னையில் வரும் 24-ம் தேதி, மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இந்தி திணிப்புப் போராட்டத்திற்கும், தமிழகத்திற்கும் நீண்ட தொடர்பு இருந்து வருகிறது. கடந்த 1937-ம் ஆண்டு, முதல் முறையாக இந்தி திணிப்புப் போராட்டம் நடைபெற்றது. சென்னை மாகாணத்தில் முதல்முறையாக வெற்றிபெற்ற ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, பள்ளிகளில் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது.
இதனை எதிர்த்து, எதிர்க்கட்சியாக விளங்கிய நீதிக்கட்சியும், தந்தை பெரியாரும் இணைந்து, உண்ணா விரதம், மாநாடுகள், பேரணி மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தி, காங்கிரஸ் அரசை திணறடித்தனர். இந்தப் போராட்டங்களில் காவல்துறையினரின் அடக்குமுறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
9 நாள்.. பெங்களூர் பள்ளி விடுதியில் இருந்து மாயமான 3 மாணவிகள்.. வேளாங்கண்ணியில் தேடும் பணி தீவிரம்
திமுக வெற்றி
பின்னர், கடந்த 1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், இந்தப் போராட்டம், மாநில அரசுகளின் அரசியல் மாற்றங்களுக்கும் வித்திட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த 1967-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக வெற்றிபெற்றது. இத்தேர்தலுக்கு பின்னர், தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியைக் கைப்பற்ற இயலவில்லை.
இந்தி திணிப்பு
இந்நிலையில், தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு, இந்தி மொழியை மறைமுகமாகவும், நேரடியாகவும் திணித்து வருகிறது. மத்திய அரசு பணியிடங்களில் இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. வடமாநில இளைஞர்களுக்கு, ரயில்வே, வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வைகோ அறிவிப்பு
இந்நிலையில், மத்திய அரசின் இந்தித் திணிப்பைக் கண்டித்து, சென்னையில் வரும் 24-ம் தேதி, மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாளையொட்டி, சென்னை சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா கலையரங்களில் மதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டார்.
இந்து சாம்ராஜ்யம்
நிகழ்ச்சியில் பேசிய வைகோ, நாட்டில் இந்தி சாம்ராஜ்யம் போய், தற்போது இந்து சாம்ராஜ்ஜியம் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டினார். இந்தி திணிப்பைக் கண்டித்து, வரும் 24-ம் தேதி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் வைகோ அறிவித்தார். பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நிகழ்ச்சியில், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மற்றும் மல்லை சத்தியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.