"அப்பாவாக மட்டும் இல்ல.. தலைவனாகவும் பெருமை”.. உதயநிதி கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்திய ஸ்டாலின்!
சென்னை: இன்று 49வது பிறந்தநாள் காணும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். "நீ ஆற்றிவரும் பணிகளை மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும்போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன்!" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திமுகவினர் நலத் திட்ட உதவிகள் வழங்கி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து திமுக நிர்வாகிகள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தனது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட கழகம் ஏற்பாட்டில், பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகளையும், ஏழை - எளிய மக்கள் - மாற்றுத்திறனாளிகள் - திருநர்கள் - தூய்மைப்பணியாளர்கள் - சுகாதாரப்பணியில் ஈடுபடுவோருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்.
அதனைத்தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் சென்று அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் உதயநிதி ஸ்டாலின். இந்தியாவின் சமூகநீதி, சமத்துவ, மதச்சார்பற்ற அரசியலைத் தீர்மானிக்கும் தலைமையிடமாக பல்லாண்டுகள் விளங்கிய கோபாலபுரம் இல்லம் நமக்கு கூடுதல் உற்சாகத்தையும் - புத்துணர்ச்சியையும் தந்தது என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் உதயநிதி.
அதனைத் தொடர்ந்து, கலைஞர் கருணாநிதியின் சி.ஐ.டி. காலனி இல்லம் சென்று கலைஞர் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்த உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சரும், திமுக தலைவரும், தனது தந்தையுமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் உதயநிதி ஸ்டாலின். அப்போது, முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், "கொள்கைப் பற்றோடு உழைப்பிலும் உயர்ந்து வரும் உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! இளைஞரணிச் செயலாளராக - விளையாட்டுத் துறை அமைச்சராக - மாண்புமிகு துணை முதலமைச்சராக நீ ஆற்றிவரும் பணிகளை மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும்போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைத் தொண்டனாக நான் உனக்கு அறிவுறுத்துவது, காட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாக, மக்களின் அன்புக்குரியவனாக, எப்போதும் அவர்களுக்காகக் களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும். இளைஞர்களிடம் திராவிட இயக்கக் கருத்தியலைத் தொடர்ந்து விதைத்து, அவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்!" என வாழ்த்தியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், "நம் பிறந்த நாளான இன்று, தந்தையும், கழகத்தலைவரும், மாண்புமிகு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களிடமும் - தாயாரிடமும் வாழ்த்துப் பெற்றோம். அவர்களின் வாழ்த்துகளோடு - தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் திராவிட_மாடல் ஆட்சி தொடரவும் எந்நாளும் உழைப்போம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications