பிடிஆர் ஆடியோ விவகாரம்.. மட்டமான அரசியல்.. உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
சென்னை: "ஆடியோ விவகாரத்தில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனே இரண்டு முறை விளக்கம் கொடுத்து இருக்கிறார். ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியல் செய்வோருக்கு விளம்பரம் தேடி தர விரும்பவில்லை என்று உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது முன்னோர்கள் தங்கள் வாழ்நாளில் சம்பாதித்ததை விட இந்த ஒரு வருடத்தில் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் அதிக பணம் சம்பாதித்ததாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இரண்டாவது ஆடியோவும் வெளியானது. எனினும் இந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்து இருந்தார்.
மேலும், எதிர்க்கட்சிகள் கூட உதயநிதி, சபரீசன் மீது குற்றச்சாட்டுக்கள் வைக்காத நிலையில், அவர்கள் மீது களங்கம் சுமத்த ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவர்களிடம் இருந்து என்னை பிரிப்பதன் மூலம் தங்கள் அரசியல் எண்ணங்களை நிறைவேற்றத் துடிக்கிறார்கள். நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இயங்கி வருகிறோம். இனியும் அவ்வாறே தொடர்வோம்" என்றும் தெரிவித்து இருந்தார்.
எனினும் அண்னாமலை இது தொடர்பாக திமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்தார். தமிழக அரசியல் களத்தில் இந்த விவகாரம் பேசுபொருளாக மாறிய நிலையில், இதற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் இது தொடர்பாக பேசியிருப்பதாவது:- "ஆடியோ விவகாரத்தில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனே இரண்டு முறை விளக்கம் கொடுத்து இருக்கிறார். ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியல் செய்வோருக்கு விளம்பரம் தேடி தர விரும்பவில்லை. மக்களுக்கான பணிகளை செய்யவே எனக்கு நேரம் சரியாக உள்ளது" என்று கூறியுள்ளார்.
கர்நாடகா, தெலுங்கானாவில் இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு ரத்து என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:- "இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது இந்து மக்களை திருப்தி படுத்தும் என பாஜக தலைமை கருதுகிறது. பாஜகவிற்கு வாக்களிக்காத மக்களில் பெரும்பாலானோர் இந்துக்கள்தான்.
பொய்களையும் வெறுப்புகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க சமூக வலைத்தளங்களை பாஜக பயன்படுத்துகிறது. மதசார்பின்மையை அரசியல் அமைப்பாக கொண்ட நாட்டில் உள்துறை அமைச்சரே இப்படி பேசுவது அரசியல் அமைப்பை மீறுவது ஆகும். அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த ஊழல் குறித்து அடுத்த கட்ட விசாரணை நடைபெறும்.
அதிமுக ஊழல் ஆட்சியை பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து சிஏஜி அறிக்கை ஆதாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. விசாரணை மேற்கொள்ள முன் அனுமதி, இசைவாணை ஆகியவற்றை பெற வேண்டியுள்ளது. அதிமுக ஆட்சியாளர்கள் மீதான ஊழல் வழக்குகள் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் 12 மணி நேர வேலை மசோதா திரும்ப பெறப்பட்ட நிலையில், அது குறித்து பேசிய முதல்வர், "பலத்தை வைத்து 12 மணி நேர வேலை மசோதாவை கொண்டு வரவில்லை. பலவீனமாக இதை வாபஸ் பெறவும் இல்லை. மனசாட்சியே நீதிபதி என்ற கலைஞரின் சொற்களுக்கு ஏற்ப நான் செயல்பட்டு வருகிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications