புரட்சி அதிமுக.. சசிகலா, பண்ருட்டி வரிசையில் புதிய கட்சி தொடங்கிய புகழேந்தி
சென்னை: ஓபிஎஸ் ஆதரவாக இருந்த புகழேந்தி தற்போது புது கட்சியினை தொடங்கியிருக்கிறார். சசிகலா, பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் புது கட்சி தொடங்கிய நிலையில் புகழேந்தியும் "புரட்சி அதிமுக" என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமையில் ஏற்பட்ட பிரச்சினையில் பிரிந்து சென்ற ஓபிஎஸ் புது கட்சி எதுவும் ஆரம்பிக்காமல் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை நடத்தி வந்தார்.

ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள்
அப்போது ஓ பன்னீர் செல்வத்துடன் புகழேந்தி மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலரும் இருந்து வந்தனர். கடந்த லோக்சபா தேர்தலின் போது பாஜக சார்பில் ராமநாதபுரத்தில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். இதையடுத்து ஓ பன்னீர் செல்வத்தை பாஜகவும் நிராகரிக்க தொடங்கியது.
இதனால் அடுத்தக் கட்ட அரசியல் நடவடிக்கையை தை மாதத்தில் சொல்வதாக கூறி வந்தார். ஆனால் ஓபிஎஸ் அடுத்தக்கட்ட முடிவினை எடுக்காததால் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். இதையடுத்து அவுருடன் இருந்த பலரும் பிரிந்து செல்ல தொடங்கினர்.
புதிய கட்சி தொடங்கிய புகழேந்தி
இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரனும் எம்ஜிஆர் அதிமுக என்ற புதிய கட்சியினை ஆரம்பித்தார். தனித்து விடப்பட்டிருந்த ஓ பன்னீர் செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி உறுதியாக வேண்டாம் என்று கூறிவிட்டாதால் திமுகவில் இணைந்தார்.
இதேபோல் சசிகலாவும் புதிய கட்சியை தொடங்கினார். இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி யாருடன் இணையப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த சூழலில் தற்போது அவரும் புது கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். புரட்சி அதிமுக என்ற பெயரில் அவர் கட்சியை தொடங்கி இருக்கிறார்.
புரட்சி என்றால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா
புரட்சி என்பது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை குறிக்கும் என்று அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில் விரைவில் தனது தேர்தல் நிலைப்பாடினை தெரிவிப்பேன் என்றும் கூறியுள்ளார். ஓ பன்னீர் செல்வம் திமுகவில் இணைந்த நிலையில் புகழேந்தி அதிமுக இணைவார் என தொண்டர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் தற்போது அவர் புதிய கட்சியை தொடங்கியிருப்பது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications