புல்வாமா தாக்குதல்... வீரர்களோடு தோளோடு தோள் நிற்போம்... கமல்ஹாசன் உருக்கம்
சென்னை: ஜம்மு-காஷ்மீர் புல்வாமா தீவிரவாத தாக்குதல் கண்டனத்திற்குரியது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மநீம கட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புல்வாமாவில் சிபிஆர்எஃப் வீரர்கள் மீது நடைபெற்ற தாக்குதலில், நாற்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் பலியான செய்தியறிந்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் அவர்கள், ஜம்மு-காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகர் விஜயகுமார் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
தேசத்தின் இந்த இக்கட்டான சூழலில் தீரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் தங்களையும் தங்கள் குழுவினரையும் இந்த நாட்டு மக்களுடன் நானும் கவனித்துக் கொண்டிருக்கின்றோம் என்றும்
தங்களின் ஒவ்வொரு நகர்விற்கும் இந்த நாட்டின் குடிமகன்கள் அனைவரும், கட்சி சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டு உங்களுடன் தோளோடு தோள் நிற்போம் என்று உறுதியளித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது என்று புல்வாமா தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.