மைனஸ் ரூ.1500 கோடி நெட் பேலன்ஸ்.. மோசமான நிலையில் CMDA.. இனி எங்க வேலை இது மட்டும் தான்!
சென்னையின் நகர வளர்ச்சியை திட்டமிடும் முக்கிய அமைப்பான சிஎம்டிஏ (CMDA), கடந்த சில ஆண்டுகளில் தனது அடிப்படைப் பொறுப்புகளைத் தாண்டி பல்வேறு கட்டுமானத் திட்டங்களில் ஈடுபட்டதால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவினச் சுமையைச் சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் தனது அடிப்படை மற்றும் முக்கிய பொறுப்புகளான நகரத் திட்டமிடல், நில ஒருங்கிணைப்பு மற்றும் கட்டுமான அனுமதி வழங்கும் பணிகளுக்கே திரும்பும் முக்கிய முடிவை எடுத்துள்ளது.

இந்த மாற்றம், தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் நிர்வாக மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் முதல்வருடன் நடந்த முக்கிய கூட்டத்தில் CMDA சந்திக்கும் பிரச்சனைகளை விவரித்த போது, இத்தகைய முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
ரூ.3,000 கோடி செலவு... மைனஸ் ரூ.1,500 கோடி பேலன்ஸ்
கடந்த இரண்டு ஆண்டுகளில் வடசென்னை வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் படிப்பகங்கள், நூலகங்கள், திருமழிசை மற்றும் முடிச்சூர் பேருந்து நிலையங்கள், அலங்கார மீன் சந்தை உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக சிஎம்டிஏ சுமார் ரூ.3,000 கோடி வரை செலவிட்டு உள்ளது.
இந்த அதிகப்படியான செலவினங்களால் தற்போது சிஎம்டிஏவின் நிதிநிலை சுமார் ரூ.1,500 கோடி பற்றாக்குறைக்கு சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். புதிய கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்ள தேவையான நிதி மட்டுமல்லாமல், அவற்றை கண்காணிக்கத் தேவையான முழுமையான இன்ஜினியர்கள் அமைப்பும் சிஎம்டிஏவிடம் இல்லை என்பதும் இந்த மறுஆய்வில் கூட்டத்தில் தெரிய வந்துள்ளது.
CMDA எடுத்த முக்கிய முடிவு
சமீபத்திய ஆய்வுக் கூட்டங்களில் சிஎம்டிஏ தனது செயல்பாடுகளை விரிவாக மதிப்பீடு செய்தபோது, அமைப்பு தனது அடிப்படை நோக்கத்திலிருந்து விலகிச் சென்றிருப்பதாக அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உண்மையில், சிஎம்டிஏவின் முக்கியப் பொறுப்பு நகர வளர்ச்சி திட்டங்களை உருவாக்குவது, குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளுக்கான லேஅவுட்களை வடிவமைப்பது, திட்ட அனுமதிகளை வழங்குவது, கட்டுமான விண்ணப்பங்களை பரிசீலிப்பது மற்றும் நகர விரிவாக்கத்துக்கான நில ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வது ஆகும்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளில் நேரடி கட்டுமானப் பணிகளில் அதிக கவனம் செலுத்தியதால், அதன் முதன்மை நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் புதிய லேஅவுட்கள் அதிகரிக்குமா?
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக புதிய நகர அமைப்பு திட்டங்கள், திட்டமிட்ட குடியிருப்பு லேஅவுட்கள் மற்றும் நில ஒருங்கிணைப்புத் திட்டங்கள் மிகவும் குறைந்த அளவிலேயே நடந்துள்ளது.
தற்போது சிஎம்டிஏ மீண்டும் தனது பிரதான பணிகளுக்கு திரும்புவதன் மூலம், புதிய குடியிருப்பு பகுதிகள் உருவாக்கம், திட்டமிட்ட நகர விரிவாக்கம், விரைவான கட்டுமான அனுமதிகள் மற்றும் நில ஒருங்கிணைப்புத் திட்டங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அணுகுமுறை
நகர வளர்ச்சி அமைப்புகள் கட்டுமான நிறுவனங்களாக அல்லாமல், திட்டமிடல் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளாக செயல்பட வேண்டும் என்ற கொள்கை உலகின் பல முன்னேறிய நகரங்களில் நடைமுறையில் உள்ளது. அதே மாதிரியான அணுகுமுறையை சென்னையிலும் நடைமுறைப்படுத்தும் முயற்சியாக சிஎம்டிஏவின் இந்த முடிவு பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications