திமுக அரசுக்கு தலைவலியா கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்? பராமரிப்பு பணியில் 'புனே' தனியார் நிறுவனம்!
சென்னை: செங்கல்பட்டு அருகே கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கு தலைவலியாக உருவெடுத்திருக்கிறது. தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பராமரிக்கும் பணியை மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கி இருப்பதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருப்பது விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து தென்மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களுக்கு தொலைதூர பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னை பாரிமுனை (பிராட்வே) பகுதியில் இருந்துதான் கோயம்பேடுக்கு பேருந்து நிலையம் ஏற்பட்டது. இது வட சென்னை, தென் சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்களை ரொம்பவும் துயரத்துக்குள்ளாக்கியது. இருந்த போதும் காலப்போக்கில் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பண்டிகை காலங்களில் கோயம்பேடு, கேகே நகர், தாம்பரம் எனவும் அலைய வேண்டிய நிலைமையும் இருந்தது.

இத்தனை தொலைவிலா?: இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக சென்னை மாநகரை விட்டு செங்கல்பட்டுக்கு முன்னதாக 25 கி.மீ. தொலைவில் உள்ள கிளாம்பாக்கத்தில் தற்போது வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கான புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது வட சென்னையில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ளது. ஒட்டுமொத்தமாக சென்னையில் குடியிருக்கும் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல நினைக்கவே முடியாத துயரத்துக்கு கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது என்பதுதான் குமுறல்.
கிளாம்பாக்கத்திலேயே இறங்கி.. : அதேபோல தென் மாவட்டங்களில் இருந்து கிளாம்பாக்கத்தில் வந்து இறங்கி சென்னை மாநகருக்குள் செல்வது என்பதும் பெரும் துயரமான பயணமாகவே இருந்து வருகிறது என்பதும் பொதுமக்களின் குமுறல். தாம்பரத்தில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் சென்னை மாநகருக்குள் செல்வது என்பதே கடினமான பயணம். இப்போது தாம்பரத்தையும் தாண்டி செங்கல்பட்டு அருகே உள்ள கிளாம்பாக்கத்திலேயே இறங்கி அங்கிருந்து பேருந்து பிடித்து வட சென்னையான எண்ணூர், தண்டையார் பேட்டை, திருவொற்றியூர் போவதாகட்டும்.. அடையாறு, திருவான்மியூர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு போவதாகட்டும் மலைக்க வைக்கக் கூடியதுதான்.
அமைச்சர் சேகர்பாபு சொன்னது என்ன?: இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, இப்பேருந்து நிலையத்தில் தேவைப்படும் நிலையில் அம்மா உணவகம் அமைக்கப்படும். பயணிகள் வசதிக்காக கூடுதல் பேட்டரி கார் ஏற்பாடு செய்யப்படும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தூய்மையாக வைத்திருக்க புனேவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு டெண்டர் கொடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.
அதிக பேருந்துகள், குறைந்த கட்டணம்: ஆனால் கிளாம்பாகத்திலேயே தங்களது சுமைகளுடன் இறங்கும் தென் மாவட்ட மக்கள், துயரமில்லாமல் சென்னையின் பல பகுதிகளுக்கு செல்ல போதுமான பேருந்துகளை குறைந்த கட்டணத்தில் இயக்குவதுதான் சற்றேனும் ஆறுதலாக இருக்கும் என்பதுதான் தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு. அதேபோல தனியார் நிறுவனம் வசம், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பராமரிப்பை ஒப்படைப்பது நடைமுறையில் பயணிகளுக்கு வசதிகளை தரப் போகிறதா? துயரத்தை தரப் போகிறதா? என்பதும் தெரியலையே என்கிற விவாதமும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications