இரவோடு இரவாக ஏர்போர்ட் மூர்த்தி அதிரடியாக கைது.. விசிகவினர் அளித்த புகாரில் நடவடிக்கை ஏன்?
சென்னை: புரட்சி தமிழகம் கட்சி தலைவராக இருப்பவர் 'ஏர்போர்ட்' மூர்த்தி. இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். திருமாவளவனை ஒருமையில் பேசிய வீடியோ அண்மையில் வெளியானது.இதனால் கோபம் அடைந்த விசிகவினர், சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி. அலுவலக நுழைவுவாயில் அருகே 'ஏர்போர்ட்' மூர்த்தியை செருப்பால் அடித்தனர். பதிலுக்கு அவரும் தாக்கினார். இந்த விவகாரத்தில் இரவோடு இரவாக ஏர்போர்ட் மூர்த்தி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
புரட்சி தமிழகம் கட்சி தலைவர் 'ஏர்போர்ட்' மூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அண்மையில் ஏர்போர்ட் மூர்த்தி சிதம்பரத்தில் தான் நிற்க தயாராக இருப்பதாக பேசினார். அப்போது திருமாவளவனை ஒருமையில் கடுமையான வார்த்தைகளில் பேசியிருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கு விசிக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்து வந்தனர்.

இதனால், சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகம் முன்பு ஏர்போர்ட் மூர்த்தி சென்று கொண்டிருந்த போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவரை செருப்பால் தாக்கினார்கள். இந்தத் தாக்குதலின்போது, ஏர்போர்ட் மூர்த்தி பதில் தாக்குதல் நடத்தினார். அப்போது கத்தியால் விசிக நிர்வாகி ஒருவரைத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் தடுக்க முயன்றும் பலன் இல்லை.
இதனிடையே கத்தியால் தாக்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில், விசிகவினர் அளித்த புகாரின் பேரில் மெரினா போலீஸார் ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்தனர். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால், இரு தரப்பினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.
டிஜிபி அலுவலகம் முன்பாக நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் போன்ற பல அரசியல் தலைவர்கள் இந்தத் தாக்குதலைக் கண்டித்தார்கள். காவல்துறை தலைமை அலுவலகம் முன்பாகவே இப்படி ஒரு தாக்குதல் நடந்தது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதைக் காட்டுவதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் ஏர்போர்ட் மூர்த்தியை இரவோடு இரவாக போலீசார் கைது செய்துள்ளனர். கொடுங்காயம் ஏற்படுத்தும் வகையில் விசிகவினரை கத்தியால் தாக்கியதாக ஏர்போர்ட் மூர்த்தி அண்ணா சதுக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications