கொரோனா தடுப்பூசியை மொத்தமாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்குக - மோடிக்கு முதல்வர் கடிதம்
கொரோனா தடுப்பூசி விலை அதிகமாக இருப்பதால் மத்திய அரசே மொத்தமாக கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். மத்திய அரசு கொள்முதல் செய்யும் விலையிலிருந்து தற்போதைய விலை உயர்வு மாறுபட்டதாக உள்ளது. இது மாநில அரசுகளுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. தினசரியும் மூன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அச்சம் காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியை புனேயை சேர்ந்த சீரம் நிறுவனமும், கோவாக்கின் தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பார்த் பயோடெக் நிறுவனமும் தயாரிக்கின்றன. இந்த 2 நிறுவனங்களுமே மத்திய அரசுக்கு ஒரு டோஸ் தடுப்பூசியை ரூ.150க்கு வழங்கி வருகின்றன. இவற்றை மத்திய அரசு வாங்கி, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இந்த தடுப்பூசிகள்தான் நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்பட்டு வருகிறது.தனியார் மருத்துவமனைகளில் ரூ.250க்கு போடப்பட்டு வந்தது.
நாடு முழுவதும் இதுவரை 14 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வரும் 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளதால் தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளது.
தடுப்பூசிகளை மாநில அரசுகளே கொள்முதல் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட சீரம் நிறுவனம், கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை இரு மடங்காக உயர்த்தியது.
மத்திய அரசுக்கு ரூ.150க்கும் மாநில அரசுகளுக்கு ரூ.400க்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600க்கும் விற்பனை செய்யப்படுமென அறிவித்தது. இது மாநில அரசுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு மாநில முதல்வர்கள் தடுப்பூசியை இலவசமாக விநியோகம் செய்யுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதையேற்றுக் கொண்ட மத்திய அரசு, சீரம் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்படுமென உறுதியளித்தது.
இந்நிலையில், சீரம் நிறுவனத்தை பின்பற்றி பாரத் பயோடெக் நிறுவனமும் கோவாக்சின் விலையை உயர்த்தியுள்ளது. மாநில அரசுகளுக்கு சப்ளை செய்யப்படும் கோவாக்சின் தடுப்பூசி ரூ.600க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200க்கும் விற்கப்படும் என்றும் அது அறிவித்தது. இந்த விலை உயர்வு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த திடீர் விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்துள்ளது.செயற்கையான தடுப்பூசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் லாபம் ஈட்ட முயற்சிகள் நடக்கின்றனவா என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தடுப்பூசி விலை உயர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கொரனோ தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய அரசு கொள்முதல் செய்யும் விலையிலிருந்து தற்போதைய விலை உயர்வு மாறுபட்டதாக உள்ளது. இது மாநில அரசுகளுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், 18 -45 வயதுக்கு உட்பட்டோருக்கு தேவையான தடுப்பூசிகளை விரைவில் வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications