“திருமணம்” உடல் சுகத்துக்காக மட்டுமல்ல.. முக்கிய நோக்கமே “இனப்பெருக்கம்”தான் - சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: திருமணத்தின் அடிப்படை நோக்கமே இனப்பெருக்கம் செய்வதுதான் என்றும், உடலுறவுக்கு மட்டுமானது அல்ல எனவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட சென்னையை சேர்ந்த தம்பதி கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரிந்து சென்றனர். இவர்களுக்கு 9 மற்றும் 6 வயதில் 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
கணவனைவிட்டு பிரிந்துசென்ற பெண், தனது கணவரின் வீட்டுக்கு எதிரில் இருந்த மற்றொரு குடியிருப்புக்கு சென்றார். 2 குழந்தைகளும் தந்தையிடமே வளர்ந்து வந்தன. தந்தை பணிக்கு சென்றபோது தாயின் பெற்றோர் பிள்ளைகளை கவனித்து வந்தனர்.

தாய் புகார்
இது தொடர்பாக ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தாய் குழந்தைகளை பார்த்து செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், தந்தை நீதிமன்ற உத்தரவை மீறி தாயை அனுமதிக்கவில்லை என்றும், பிரிந்து சென்ற மனைவியை பற்றி தவறாக பேசி குழந்தைகளை தன்னைவிட்டு பிரிக்கும் வகையில் நடப்பதாகவும் கூறப்பிடுகிறது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில் தந்தையின் கட்டுப்பாட்டில் அவரது வீட்டில் இருக்கும் தன்னுடைய 2 மகன்களையும் தன்னிடம் ஒப்படைக்கக்கோரி தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

தீய உலகம்
வழக்கை விசாரித்த நீதிபதி, "தங்களின் சிறுவயது குழந்தைகளை கட்டுப்பாட்டில் வளர்க்க வேண்டும் என வழக்கு தொடரும் பிரிந்து சென்ற தம்பதிகள் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற வழக்குகளால், இருவரின் விருப்பத்துக்காக குழந்தைகளை இந்த தீய உலகத்திற்குள் கொண்டு வருவதாகும்.

திருமணத்தின் நோக்கம்
திருமண முடிச்சு போடும் நபர்களுக்கு இந்த நீதிமன்றம் அழுத்தமாக ஒன்றை சொல்கிறது. திருமணம் என்பது உடல் இன்பத்திற்காக மட்டும் செய்யப்படுவது அல்ல. மாறாக அதன் அடிப்படை நோக்கமே இனப்பெருக்கம்தான். அப்போதுதான் குடும்ப சங்கிலி நீளும். திருமண பந்தத்தின் மூலம் பிறக்கும் குழந்தை இரண்டு தனிநபர்களை இணைக்கிறது.

மனிதாபிமானமற்ற செயல்
குழந்தைகளை தாயை விட்டு பிரிப்பது அவர்களை துன்புறுத்தும் செயலாகும். ஒரு குழந்தையை அதன் பெற்றோருக்கு எதிராக திருப்புவது என்பது தனக்கு எதிராக திருப்புவதை போன்றதாகும். இது ஒரு மனிதாபிமானமற்ற செயல் மட்டுமின்றி, குழந்தைக்கு தீங்கு விளைவிப்பதாகும். குழந்தையால் நம்பப்படும் நபர்கள் சொல்லிக்கொடுக்காத வரை, தாய் அல்லது தந்தை மீது இயல்பாக ஒரு குழந்தைக்கு வெறுப்புணர்வு வராது.

அதிரடி உத்தரவு
மனைவியை விட்டு பிரிந்த கணவரின் நடவடிக்கையை வைத்துப் பார்க்கையில் அவை பாதுகாப்பாக இருப்பதாக தெரியவில்லை. எனவே 2 குழந்தைகளும் அதன் தாயின் தற்காலிக கட்டுப்பாட்டில் இருக்க உத்தரவிடுகிறது." என்றார். மேலும் குழந்தைகள் அதன் சொந்த தாத்தா, பாட்டியின் கட்டுப்பாட்டில் இருப்பதையும், தொடர்ந்து பள்ளிக்கு செல்வதையும், இடையூறு இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications