உள்ளதும் போச்சே.. சென்னை புழல் ஏரி முற்றிலும் வறண்டது.. குடிநீர் கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
சென்னை: சென்னையை அடுத்த புழல் ஏரி முற்றிலும் வறண்டது. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 3 ஆண்டுகளாக பொய்த்து வருகிறது. இதனால் கோடை காலத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. மக்கள் குடிநீருக்காக அல்லல்படும் நிலை ஏற்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில் இந்த ஆண்டு நீண்ட நாளுக்கு பிறகு ஃபனி புயல் உருவானது. அது தமிழகம் அருகே அதாவது சென்னை- புதுவை இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதிர்ஷ்டம் இல்லை
அவ்வாறு கடந்தால் இந்த ஃபனி புயல் நல்ல மழையை கொடுத்து சென்னையின் தண்ணீர் பஞ்சத்தை முற்றிலும் போக்கிவிடும் என வானிலை நிபுணர்கள் தெரிவித்தனர். ஆனால் வழக்கம் போல் நமது துரதிருஷ்டம் நமக்கு முன்னால் போய் நின்றுவிட்டது.

தண்ணீர் எங்கே
ஆம், அந்த புயல் ஒடிஸாவுக்கு சென்றுவிட்டது. இதனால் இந்த கோடை காலத்தில் வழக்கத்துக்கு அதிகமாக வெப்பம் வாட்டி எடுத்தது. ஒரு பக்கம் வெப்பம், மறுபக்கம் தண்ணீர் தட்டுப்பாடு என தமிழகமே தண்ணீருக்கான தேடுதலில் ஈடுபட்டுள்ளது.

தண்ணீர்
இந்த நிலையில் செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகள் வறண்டு விட்டன. இதனால் சென்னை உள்பட சுற்றுவட்டார பகுதிகளுக்கு தண்ணீர் அனுப்பும் பணி நிறுத்தப்பட்டது.

தண்ணீர்
இந்த நிலையில் புழல் ஏரியும் முற்றிலும் வறண்டுவிட்டது. அந்த ஏரியிலிருந்து நேற்று வரை 6 கனஅடி நீர் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது முற்றிலும் வறண்டுவிட்டதால் புழலிலிருந்து ஓரளவு தண்ணீர் எடுக்கப்பட்டு வந்த நிலையில் தண்ணீர் எடுக்கும் பணிகள் நிறுத்தப்பட்டது. இதனால் குடிநீர் பஞ்சம் மேலும் தலைவிரித்தாடும் என்று சென்னை மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications