மொத்தமாக கிளம்பிய மக்கள்.. சென்னை பெருங்களத்தூர் ஸ்தம்பித்தது.. கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை: காலாண்டு விடுமுறை என்பதால் பலரும் சொந்த ஊர் செல்ல குவிந்த காரணத்தால் சென்னை பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெருங்களத்தூர் முதல் வண்டலூர் வரை ஒன்றரை கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
செப்டம்பர் 28ம் தேதி மிலாடி நபி, அதற்கு அடுத்தாக சனி மற்றும் ஞாயிறு, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை வருகிறது. இதேபோல் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. ஏற்கனவே தனியார் மெட்ரிகுலேசன்பள்ளிகளுக்கு கடந்த 24ம் தேதியில் இருந்தே விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊருக்கு (புதன்கிழமை) புறப்பட்டனர். இதேபோல் ஏராளமான சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. பல ஆம்னி பேருந்துகள் முழு வீச்சில் இயங்கின.
சென்னையில் இருந்து மதுரை, கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி. நெல்லை என தமிழ்நாட்டின் 90 சதவீதம் ஊர்களின் மக்கள் சென்னையில் இருந்து அவர்களின் ஊருக்கு செல்ல பெருங்களத்தூர் வண்டலூர் செங்கல்பட்டு வழியாகவே செல்கிறார்கள்.
இந்த சூழலில் ஒட்டுமொத்தமாக சென்னையில் இருந்து பல்லாயிரம் பேர் ஒரே நேரத்தில் கார்கள், பேருந்துகள், பைக்குகள் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் கிளம்பினார்கள். சென்னையில் இருந்து எல்லா வாகனங்களும் பெருங்களத்தூரை தாண்டித்தான்3 போக வேண்டும் என்பதால், தாங்க முடியாத அளவிற்கு நெரிசல் ஏற்பட்டது.
பெருங்களத்தூரின் தொடக்கம் வண்டலூர் வரை நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.ஒருபக்கம் பேருந்து நிறுத்தம் என்பதால் அரசு பேருந்துகள் அனைத்தும் ஒரு பாதையில் நின்றன.மறுபாதையில் தனியார் வாகனங்களும் சென்று முன்பாக போய் நின்று ஆட்களை ஏற்றிச்சென்றன. இது காரணங்கள் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருந்தது. அதேநேரம் பெருங்களத்தூரில் நடைபெறும் மேம்பால பணியும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக அமைந்தது.
சென்னை பெருங்களத்தூரில் ஒரே நேரத்தில் எல்லா வாகனங்கள் சந்திக்கும் நிலையில், அங்கு உள்ள சிக்னலும் நெரிசலை அதிகப்படுத்தியது. இதனால் பெருங்களத்தூர் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலும் வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன. இதேபோல் அதிகப்படியான வாகன நெருக்கம் காரணமாக பரனூர் சுங்கச்சாவடி பகுதியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications