Flash Back: பிரிட்டன் ராணி 2-ம் எலிசபெத் கலந்து கொண்ட கமல்ஹாசனின் மருதநாயகம் படத் தொடக்க விழா!
சென்னை: மறைந்த இங்கிலாந்தின் 2-ம் எலிசபெத் ராணி 25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தின் சென்னையில் நடைபெற்ற நடிகர் கமல்ஹாசனின் மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்க விழாவில் சுமார் 20 நிமிடங்கள் பங்கேற்றார். அப்போது மறைந்த தமிழக தலைவர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஜிகே மூப்பனார், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்டோரும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இங்கிலாந்தின் பக்கிங்காம் அரண்மனை வழக்கத்துக்கு மாறாக, ராணி 2-ம் எலிசபெத் உடல்நிலை கவலைக்கிடமாக வியாழக்கிழமை இரவு அறிவித்தது. இங்கிலாந்து ராணி 2-வது எலிசபெத்தின் வயது 96. வயது முதுமை காரணமாக அவரது உடல்நிலை பாதிப்படைந்திருந்தது. மருத்துவர்களின் தீவிரமாக கண்காணிப்பில் இருந்த நிலையில் ராணி எலிசபெத் இன்று இரவு காலமானார் என பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
1952-ம் ஆண்டு தமது இங்கிலாந்தின் ராணியாக முடிசூட்டப்பட்டவர் 2-ம் எலிசபெத். சுமார் 70 ஆண்டுகள் இங்கிலாந்தை ஆட்சி செய்தார். உலகில் மிக அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த ராணி என்ற பெருமைக்குரியவர் எலிசபெத்.
2-ம் எலிசபெத் மகாராணி 3 முறை இந்தியாவுக்கு வருகை தந்தார். 1961-ம் ஆண்டு முதல் முறையாக 2-ம் எலிசபெத் இந்தியா வருகை தந்தார். அப்போது மும்பை, ஜெய்ப்பூர், ஆக்ரா, கல்கத்தா மற்றும் சென்னை ஆகிய மாநகரங்களைப் பார்வையிட்டார். சென்னையில் பெருந்தலைவர் காமராசரை எலிசபெத் மகாராணியார் சந்தித்தார்.
1983-ம் ஆண்டு இந்தியா வருகை தந்த ராணி 2-ம் எலிசபெத், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்தார். இந்த சந்திப்பி டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்றது. டெல்லியில் அன்னை தெரசாவையும் அப்போது சந்தித்தார் எலிசபெத் மகாராணி.
1997-ம் ஆண்டு 3-வது முறையாக இந்தியப் பயணம் மேற்கொண்டார் எலிசபெத் மகாராணி. முன்னதாக பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டார். இந்தியா- பாகிஸ்தான் நாடுகளின் 50-வது விடுதலை ஆண்டு. அப்போது தமிழ்நாட்டுக்கும் வருகை தந்தார் இரண்டாம் எலிசபெத்.
சென்னை தரமணி எம்.ஜி.ஆர். திரைப்பட நகரில் நடைபெற்ற கமல்ஹாசனின் பிரம்மாண்ட கனவு திரைப்படமான மருதநாயகத்தின் தொடக்க விழாவில் இரண்டாம் எலிசபெத் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 20 நிமிடங்கள் பங்கேற்றார் அவர். இந்நிகழ்வில் அப்போது தமிழக முதல்வராக இருந்த மறைந்த கருணாநிதி, முதுபெரும் தலைவர் ஜி.கே.மூப்பனார், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.