"R ஃபேக்டர்" இதுதான் தலைவலி.. கொரோனா எண்ணிக்கை குறைந்தாலும் சந்தோஷப்பட முடியாது.. 3வது அலை ஆரம்பம்?
சென்னை: இந்தியா முழுக்க கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்தபோதிலும், R factor என்று அழைக்கப்படக் கூடிய ஆர் எண், அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பது, கொரோனா 3வது அலையை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
ஆர் எண் அதிகரிப்பதை உறுதி செய்யும் வகையில், சென்னையில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு பகுப்பாய்வை வெளியிட்டுள்ளனர்.
மே மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து கடந்த மாதத்தின் பிற்பகுதி வரை ஆர்-ஃபேக்டர் 0.78 ஆக இருந்தது. ஜூன் மாத இறுதியில் 0.88 ஆக அதிகரித்துள்ளது.

ஆர் நம்பர் என்றால் என்ன?
ஆர் நம்பர் என்பது கொரோனா வைரஸை மதிப்பிடுவதற்கான ஒரு வழி அல்லது நோயை பரப்பும் திறன் ஆகும். R என்பது பாதிக்கப்பட்ட நபர் ஒரு வைரஸை சராசரியாக பரப்பும் நபர்களின் எண்ணிக்கை. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத மக்கள்தொகையில் தட்டம்மை வேகமாக பரவியது. தடுப்பூசிக்கு பிறகு அது கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தட்டம்மையின் R எண் 15 ஆகும். அதாவது, சராசரியாக, ஒருவர் 15 பேருக்கு தட்டம்மை நோயைப் பரப்ப முடிந்தது. கொரோனா வைரஸ் அதாவது, சார்ஸ்-கோவி -2 வைரஸ், R எண் 3 என்ற அளவில் உள்ளது. அது ஏரியாவுக்கு தக்க மாறுபடுகிறது.

கேரளா மற்றும் வட கிழக்கு மாநிலங்கள்
"கேரளாவில் கொரோனா கேஸ்கள் குறையவில்லை. அதற்கு காரணம், கேரளாவில், ஆர்-எண் 1 என்ற அளவுக்கு அருகில் உள்ளது. வடகிழக்கு மாநிலங்களும் இதுபோல பாதிக்கப்பட்டுள்ளன. மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகியவை கேஸ்கள் எண்ணிக்கை அதிகரிக்க இது ஒரு காரணம்" என்று, ஆய்வாளர் சின்ஹா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச பாதிப்பு
கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது, நாட்டின் ஒட்டுமொத்த ஆர்-மதிப்பு மார்ச் 9 முதல் ஏப்ரல் 21 வரை 1.37 என்ற அளவுக்கு அதிகரித்தது. இது ஏப்ரல் 24 முதல் மே 1 வரை 1.18 ஆகவும், பின்னர் ஏப்ரல் 29 முதல் மே 7 வரை 1.10 ஆகவும் குறைந்துள்ளது என்கிறது டேட்டா.

கேரளா நிலவரம்
மே 9 மற்றும் 11 க்கு இடையில், ஆர்-மதிப்பு 0.98 ஆக இருந்தது. பின்னர் மே 14 முதல் மே 30 வரை 0.82 ஆக இருந்தது. ஆர்-மதிப்பு மே 15 முதல் ஜூன் 26 வரை 0.78 ஆகவும், ஜூன் 20 முதல் ஜூலை 7 வரை 0.88 ஆகவும் இருந்தது. கேரளாவில், ஆர்-மதிப்பு 1.10 ஆக இருக்க வாய்ப்புள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வட கிழக்கு மாநிலங்களில் அதிக பாதிப்பு
வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை, மணிப்பூருக்கான ஆர் எண்- 1.07, மேகாலயா 0.92, திரிபுரா 1.15, மிசோரம் 0.86, அருணாச்சல பிரதேசம் 1.14, சிக்கிம் 0.88, அசாம் 0.86 என்ற அளவில் உள்ளன. கேரளாவில், சனிக்கிழமையன்று 14,087 புதிய கொரோனா கேஸ்கள் மற்றும் 109 உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தன. மாநிலத்தில் ஆக்டிவ் கேஸ்கள், 1,13,115 ஐத் தொட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் 19,760 கேஸ்கள் பதிவாகியுள்ளன.

நாட்டு நிலவரம்
"இந்தியாவின் ஆர் எண் மதிப்பு ஜூன் மாத இறுதியில் 0.88 ஆக உயர்ந்துள்ளது" என்று சின்ஹா கூறினார். இதன் அர்த்தம் என்னவென்றால், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு 100 பேரும் சராசரியாக 88 நபர்களுக்கு தொற்றுநோயை கடந்துகிறார்கள்.
ஆர் 1 ஐ விடக் குறைவாக இருந்தால், இதன் பொருள் முந்தைய காலகட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது, அதாவது நோய் பாதிப்பு குறைந்து வருகிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

மூன்றாவது அலை பற்றி பயம்
R எண்ணிக்கை 1ஐ விட அதிகமாக இருந்தால், புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அர்த்தம். அறிவியல் ரீதியாக, இதை நாம் தொற்றுநோய் கட்டம் என்று அழைக்கிறோம். ஆர் எண்ணிக்கை 1ஐ விட அதிகமாக இருப்பது ஆபத்தானது "என்று சின்ஹா மேலும் கூறினார். இப்படியான நிலை உருவானால், 3வது அலை ஏற்படுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications