முதல்முறையாக நாடார் சமூகத்தை சேர்ந்தவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக்கினோம்! ஆளுநர் ஏற்கவில்லை: ஆர்எஸ் பாரதி
சென்னை: நாடார் ஒருவர் டிஎன்பிஎஸ்சியின் தலைவராவதை ஆளுநர் ஏற்க மறுக்கிறார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
தமிழக காவல் துறை டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபு பணிக்காலம் கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து தமிழகத்தின் டிஜிபியாக சங்கர் ஜிவால் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக டிஜிபியாக இருந்த நடராஜ் ஓய்வுக்கு பிறகு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த வகையில் தற்போது காலியாக உள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திர பாபு நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது
அதன்படி தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் தலைவராக சைலேந்திர பாபு, 10 உறுப்பினர்கள் பதவிகளுக்கான பெயர்களை பரிந்துரை செய்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது. இந்த பட்டியல் அனுப்பி ஒரு மாத காலமாகியும் ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்பட்டது.
ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதில் அளித்த பிறகும் ஒப்புதல் அளிக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபு நியமனம் உள்ளிட்ட அனைத்து பரிந்துரைகளையும் ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார். இந்த நியமனங்கள் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிவிட்டார்.
இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கருணாநிதி முதல்வராக இருந்த போது பிரதிநிதித்துவம் இல்லாத சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு பதவி வழங்கினார். அதே நோக்கில்தான் டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமித்து முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு கோப்புகளை அனுப்பியுள்ளார்.
1930ஆம் ஆண்டு முதல் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டவர்களின் பட்டியல் என்னிடம் உள்ளது. இதில் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இதுவரை தலைவராக இல்லையோ அதனை பார்த்து காவல் துறையில் நேர்மையாக பணியாற்றி ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திர பாபுவை பரிந்துரை செய்து அனுப்பினால் அதை ஆளுநர் ஏற்க மறுக்கிறார்.
கடந்த காலங்களில் டிஎன்பிஎஸ்சியில் பல தவறுகள் நடந்துள்ளன. அது நடக்கக் கூடாது என்பதற்காகவே சைலேந்திர பாபு போன்ற நேர்மையானவர்களை நியமிக்கிறோம். இந்த விவகாரத்தில் ஆளுநர் மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதில் அளித்து ஒரு மாதம் ஆகிவிட்டது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அதிமுகவினரையே டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமித்தார். ஆனால் திமுக ஆட்சியில் அரசியலுக்கு அப்பாற்பட்டவரான சைலேந்திர பாபுவைதானே பரிந்துரை செய்துள்ளோம். ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்திற்கு போட்டியாக இன்னொரு அரசை நடத்தி வருகிறார். நாடார் சமூகத்தை சேர்ந்தவர் இதுவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக வரவில்லை. எனவே சமூகநீதி நோக்கத்தோடு சைலேந்திர பாபுவை முதல்வர் நியமித்துள்ளார். ஆனால் அதை ஆளுநர் ஏற்க மறுக்கிறார். இவ்வாறு ஆர்.எஸ். பாரதி விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications