தவறை உணர்ந்து கொண்டேன்.. ஊடகங்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்தார் ஆர்.எஸ் பாரதி!
சென்னை: ஊடகங்கள் குறித்த சர்ச்சையாக பேசியதற்காக திமுக அமைப்புச் செயலாளர் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர், ஆர்.எஸ் பாரதி வருத்தம் தெரிவித்துள்ளார்.
திமுக அமைப்புச் செயலாளர் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர், ஆர்.எஸ் பாரதி நேற்று ஊடகங்கள் குறித்தும், பிராமணர்கள் குறித்தும் பேசியது பெரிய சர்ச்சையானது. அவரின் பேச்சுக்கு எதிராக கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

பல்வேறு தரப்பில் இருந்தும் ஊடகத்தினர் அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல் பாஜக தரப்பும், அதிமுகவும் கூட ஆர்.எஸ் பாரதி கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் ஆர்.எஸ் பாரதி தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
அதில், நான் எந்த உள்நோக்கத்தோடும் பேசவில்லை. நான் தவறாக சொல்லவில்லை. யாரையும் தனிப்பட்ட வகையில் பேசவில்லை. சில ஊடகங்களைதான் தாக்கினேன். உண்மையை சொல்லிவிட்டு, அதன்பின் அதை வேறு விஷயத்தோடு தொடர்புபடுத்தி பேசினேன்.
இதனால் உங்களுக்கு காயம் ஏற்பட்டு இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் என்னிடம் பேசினார். என்னிடம் இது தொடர்பாக ஸ்டாலின் வருத்தம் தெரிவித்தார். நானும் இதை தவறு என்று உணர்ந்து கொண்டேன், அதனால் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று ஆர். எஸ் பாரதி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஆர்.எஸ் பாரதி தனது பேச்சில், இடஒதுக்கீடு என்பது தலித்துக்கு திமுக போட்ட பிச்சை. ஊடகத்தினர் தவறான தொழில் செய்கிறார்கள். வடஇந்தியர்கள் எல்லோரும் முட்டாள்கள். என்பது தொடங்கி பலரை மிக கடுமையான வார்த்தைகளால் ஆர்.எஸ் பாரதி விமர்சனம் செய்ததாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications