சித்தி 2ல் இருந்து விலகி முழு நேர அரசியல்வாதியாக மாறிய ராதிகா - தேர்தலில் போட்டியிடுவாரா?
சித்தி 2 சீரியலில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபடப்போகிறார் ராதிகா சரத்குமார். சட்டசபைத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதால் இந்த முடிவை எடுத்துள்ளார்.
சென்னை: நடிகை ராதிகா சித்தி 2 சீரியலில் இருந்து விலகி நேரடி அரசியலில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளார். எதனையும் எதிர்பார்க்காத அன்புக்கும் விசுவாசத்துக்கும் மிக்க நன்றி, தொடர்ந்து சித்தி 2வுக்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராதிகா. முழு நேர அரசியல்வாதியாக களமிறங்கும் ராதிகா சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவாரா என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சன் டிவியில் சித்தி 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ராதிகாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராடான் டிவி இந்த சீரியரை தயாரித்து வருகிறது. 21 ஆண்டுகளுக்கு முன்பு சித்தி சீரியலை தயாரித்து சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்தார் ராதிகா. பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்துள்ளார்.
ராடான் நிறுவனம் பல சீரியல்களை தயாரித்தாலும் இரவு 9.30 மணி சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் ராதிகா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் ராணியாக வலம் வந்த ராதிகா, சீரியல் உலகத்தை விட்டு விலகி முழு நேர அரசியல்வாதியாக வலம் வரப்போகிறார்.
|
அனைவருக்கும் நன்றி
இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராதிகா, சீரியல் உலகத்தை விட்டு விலகுவது வருத்தம் தருகிறது. கொஞ்சம் மகிழ்ச்சியும் கொஞ்சம் சோகமும் கலந்த ஒரு மனநிலையில் இருக்கிறேன். இப்போதைக்கு சித்தி 2 தொடர்களிலிருந்து விலகுகிறேன். கடின உழைப்பை இன்று வரை சன் டிவிக்கு தந்திருக்கிறேன். உடன் பணிபுரிந்த சக கலைஞர்கள் தொழில் நுட்ப வல்லுநர்களுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். கவின், வெண்பா மற்றும் யாழினி உடன் இந்த சீரியல் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
|
அன்பான ரசிகர்கள்
எனது ரசிகர்கள் மற்றும் நல விரும்பிகளுக்கு என் அன்பு. எதனையும் எதிர்பார்க்காத அன்புக்கும் விசுவாசத்துக்கும் மிக்க நன்றி, தொடர்ந்து சித்தி 2வுக்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவர் சரத்குமாருடன் இணைந்து அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராதிகா முழு நேர அரசியல் பயணத்தை தொடரவே இந்த முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
22 ஆண்டுகள் கழித்து
ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரித்த முதல் தொடராக சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி தொடரின் 2ம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ராதிகா சரத்குமார், நிழல்கள் ரவி, ஜெயலட்சுமி, காயத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சித்தி சீரியலின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு தொடங்கியது. சித்தி 2 தொடரிலிருந்து விலகுவதாக ராதிகா சரத்குமார் தெரிவித்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலில் போட்டி
சினிமாவில் நடித்த போது திமுகவிற்காக தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார் ராதிகா. சரத்குமார் தனியாக கட்சி ஆரம்பித்த பின்னர் தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்து வந்தார். சட்டசபைத் தேர்தல் நெருங்குவதால் தற்போது சீரியலில் இருந்து விடை பெறும் ராதிகா முழு நேர அரசியல்வாதியாக பயணிக்கப் போகிறார். சமத்துவ மக்கள் கட்சிக்காக பிரச்சாரம் செய்யப் போகும் ராதிகா இந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.