ராகுல் காந்தி இன்று தமிழ்நாடு விசிட்! ஒரே நாளில் 3 தொகுதிகளில் பிரசாரம்.. காங்கிரஸ் ஹேப்பி
சென்னை: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வருகிறார். முதல் முறையாக ராகுல் காந்தி பிரசாரம் செய்ய தமிழ்நாடு வருவதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் வெற்றியை கொண்டாடி வரும் சூழலில், ராகுல் காந்தி சூட்டோடு சூடாக தமிழ்நாடு வருகிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒருவாரம் கூட இல்லாத நிலையில் அரசியல் கட்சிகள் அனல் பறக்க தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. முதல்வர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சீமான், விஜய் உள்ளிட்ட தலைவர்களும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திமுக கூட்டணியை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகத்திற்கு பிரசாரம் செய்யாமல் இருந்தார். ராகுல் காந்தி அப்செட்டில் இருப்பதால்தான் பிரசாரம் செய்யவரவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. எனினும் டெல்லியில் நாடாளுமன்ற கூட்டம் உள்ளிட்ட பணிகளில் பிசியாக இருப்பதால்தான் ராகுல் காந்தி பிரசாரத்திற்கு வரவில்லை என்றும், அந்த பணிகள் முடிந்ததும் ராகுல் காந்தி வருவார் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறி வந்தனர்.
இந்த நிலையில், ராகுல் காந்தி இன்று தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் ராகுல் காந்தி பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். அதேபோல, சோளிங்கர் செல்லும் ராகுல் காந்தி அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் உரையாற்றிவிட்டு திருச்சி செல்கிறார்.
திருச்சி துறையூர் தொகுதியில் நடைபெறும் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் தோல்வி அடைந்தன. இந்த மசோதா தோல்வி அடைந்தது, ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.
தொகுதிகளை 850 ஆக உயர்த்த முயற்சிக்கும் மத்திய அரசின் முயற்சி தோற்கடிக்கப்பட்டதால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உற்சாகம் அடைந்துள்ளன. இந்த சூழலில்தான், அதே சூட்டோடு சூடாக ராகுல் காந்தி இன்று தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். திருச்சி துறையூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு மாலை 5.10 மணிக்கு துறையூரில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5.25 மணிக்கு திருச்சி சென்றடைகிறார்.
திருச்சியில் இருந்து மாலை 5.40 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு டெல்லி செல்ல உள்ளார். ராகுல் காந்தி இன்று பிரசாரம் செய்ய உள்ள தொகுதிகளிலுமே காங்கிரஸ் கட்சியே போட்டியிடுகிறது.












Click it and Unblock the Notifications