ராகுல் தகுதிநீக்கம்.. ‛வேர்ட்லி’யில் பிஸியான கார்த்தி சிதம்பரம்! விளாசிய நெட்டிசன்களுக்கு கூல் பதில்
சென்னை: ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை கிடைத்த நிலையில் அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் போராடாத நிலையில் கடந்த 25ம் தேதி வேர்ட்லி வார்த்தை புதிர் விளையாடி ட்விட்டரில் பதிவேற்றினார். இதனால் கார்த்தி சிதம்பரத்தை ஏராளமானவர்கள் விமர்சனம் செய்த நிலையில் தற்போது அதற்கு கூலாக அவர் பதில் அளித்துள்ளார். இதனையும் நெட்டிசன்கள் விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரளா மாநிலம் வயநாடு தொகுதி எம்பியாகவும் இருந்தவர் ராகுல்காந்தி. இவர் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடகா மாநிலம் கோலாரில் லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோர் விவகாரம் குறித்து பேசினார்.
அப்போது திருடர்களின் பெயர்கள் ஏன் மோடி என்ற பெயரில் முடிவடைகிறது என கேள்வி எழுப்பினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ராகுல் காந்தி மோடி என்ற ஓபிசி பிரிவினரை அவமரியாதை செய்ததாகவும், பிரதமர் மோடியை அவமானப்படுத்தியதாகவும் கூறினர்.

ராகுல் காந்தி தகுதி நீக்கம்
இதையடுத்து குஜராத் மாநில பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி ராகுல் மீது சூரத் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு போட்டார். இந்த வழக்கில் கடந்த 22ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும், மேல்முறையீட்டுக்காக 30 நாட்கள் ஜாமீன் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்தது. மேலும் இந்த தண்டனையை காரணம் காட்டி ராகுல் காந்தி லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர்கள் மீது குற்றச்சாட்டு
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் காங்கிரஸ் கட்சியில் பல வழக்கறிஞர்கள் இருந்தும் இந்த வழக்கை சரியாக எதிர்கொள்ளவில்லை. இதனால் தான் ராகுல் காந்திக்கு தண்டனை கிடைத்து எம்பி பதவியை இழந்துள்ளார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நேரத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வீதியில் இறங்கி போராடாமல் அமைதி காத்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

கார்த்தி சிதம்பரம் மீது விமர்சனம்
குறிப்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், ராஜ்யசபா எம்பியுமான ப சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்பியுமான கார்த்தி சிதம்பரம் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டார். அதாவது கார்த்தி சிதம்பரம் தினமும் தனது ட்விட்டர் பக்கத்தில் வேர்ட்லி எனும் வார்த்தை புதிர் விளையாட்டை பதிவு செய்து வருகிறார். அதேபோல் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகும் கடந்த 25ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதை பார்த்த நெட்டிசன்கள், கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதவியை இழந்துள்ளார். அவருக்காக களத்தில் இறங்கி போராடுவதை விட்டுவிட்டு இப்படியா வேர்ட்லி விளையாடுவது என கடுமையாக விமர்சனம் செய்தனர்.

அதிக ரீச்சான வேர்ட்லி பதிவு
மேலும் பொதுவாக வேர்ட்லி தொடர்பாக கார்த்தி சிதம்பரம் போடும் பதிவுகள் ஆயிரத்தை கூட தொடாமல் இருக்கும். ஆனால் கடந்த 25ம் தேதிக்கான அவரது வேர்ட்லி ட்விட்டர் பதிவு 473K பார்வையாளர்களை கடந்தது. மேலும் ஏராளமானவர்கள் கார்த்தி சிதம்பரத்தை திட்டி பதிவிட்டனர். இதற்கு கார்த்தி சிதம்பரம் எதுவும் தெரிவிக்காமல் இருந்தார்.

கூலாக பதில் சொன்ன கார்த்தி சிதம்பரம்
இந்நிலையில் தான் 2 நாட்களுக்கு பிறகு கார்த்தி சிதம்பரம் வேர்ட்லி பற்றியும், தன் மீதான விமர்சனம் குறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தி்ல, ‛‛எனது wordle இவ்வளவு கவனத்தை ஈர்க்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். வெகுண்டெழுந்த அனைவரும் இதை முயற்சிக்க வேண்டும். இது மனஅழுத்தத்தை நல்ல முறையில் போக்குகிறது'' என கூலாக கூறியுள்ளார். இந்த பதிவையும் தற்போது நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications