3 விஷயங்கள்.. ஸ்டாலின் பாணியை கையில் எடுத்த ராகுல்.. தேசிய அரசியலை ஆட்டிப்பார்க்கும் தமிழ்நாடு!
சென்னை: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பேச்சை தொடர்ந்து தேசிய அளவில் தமிழ்நாடு என்ற வார்த்தை டிரெண்டாகி வருகிறது. உங்கள் வாழ்நாளில் உங்களால் தமிழ்நாட்டை ஆட்சியே செய்ய முடியாது என்று ராகுல் காந்தி சொன்னதை தாண்டி அவரின் பேச்சு பல்வேறு முக்கிய விவாதங்களை தேசிய அளவில் ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
நேற்று லோக்சபாவில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மாநில உரிமைகள் குறித்தும், இந்திய ஒற்றுமை குறித்தும், ஒன்றியம் பற்றியும் பேசினார். அதில், இந்தியா இரண்டாக இருக்கிறது.. பணக்காரர்களுக்கு என்று ஒரு இந்தியா, ஏழைகளுக்கு என்று ஒரு இந்தியா இருக்கிறது.
நாட்டின் ஆன்மாவை கட்டுப்படுத்தும் மிகப் பெரிய சக்தி பணக்காரர்களிடம் உள்ளது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். இந்தியா என்பது ஒரு ராஜாங்கம் கிடையாது. இது மாநிலங்களின் கூட்டமைப்பு.

இந்திய ஒன்றியம்
இந்தியா என்பது.. நான் என் தமிழ்நாட்டு சகோதரர்களிடம் அவர்களின் கோரிக்கையை கேட்பது. அவர்கள் என்னிடம் அவர்களின் கோரிக்கையை சொல்வது. அதுவே இந்தியா.. நீங்கள் நினைப்பது போல மன்னராட்சி நடக்கும் ராஜ்ஜியம் கிடையாது அது. நீங்கள் ராஜாவும் இல்லை. நான் ஒன்று சொல்கிறேன்.. . உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழ்நாட்டு மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது, என்று ராகுல் காந்தி கடுமையான குரலில் நேற்று லோக்சபாவில் கர்ஜித்தார்.

நீட்
அதோடு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காமல் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதை விமர்சனம் செய்து இருந்தார். தற்போதைய இந்திய சிஸ்டமில் தமிழ்நாட்டின் குரல் கேட்கப்படுவது இல்லை. தமிழ்நாட்டை மத்திய ஒன்றிய அரசு கண்டுகொள்வது இல்லை. அவர்கள் உங்களிடம் ஒவ்வொரு முறை வந்து கேட்கிறார்கள்.. நீட் வேண்டாம் வேண்டாம் என்கிறார்கள். ஆனால் நீங்கள் அதை கண்டுகொள்வதே இல்லை என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நீட் குறித்தும் கடுமையாக தனது உரையில் பேசினார்.

தமிழ்நாடு
ராகுல் காந்தி உரையை தொடர்ந்து தமிழ்நாடு என்ற வார்த்தை நேற்று ட்விட்டரில் டிரெண்டானது. நேற்று மாலை தொடங்கிய டிரெண்ட் இப்போது வரை இணையத்தில் டாப்பில் இருக்கிறது. பலர் தேசிய அளவில் தமிழ்நாடு பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாடு என்ற ஒற்றை வார்த்தை தற்போது தேசிய அளவில் ஒன்றியத்தை உலுக்கும் அரசியல் சொல்லாக உருவெடுத்து உள்ளது. இந்த டேக்கிற்கு கீழ் மிக அதிக அளவில் விவாதங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.

ஸ்டாலின் பாணி
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் பாணியை தேசிய அளவில் ராகுல் காந்தி கையில் எடுத்து இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்தது. கடந்த வருடம் ஆட்சிக்கு வந்த பின் முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் ஒன்றியம் குறித்து பேசினார். ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்துவது ஏன் என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கேட்டதற்கு பதில் அளித்த ஸ்டாலின், ஒன்றியம் என்பது கெட்ட வார்த்தை அல்ல. அது நமது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கும் வார்த்தைதான்.

ஒன்றியம்
இந்தியா என்பது மாநிலங்களால் ஆன ஒன்றியம் என்றுதான் இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து அப்படித்தான் பயன்படுத்துவோம். பல மாநிலங்கள் இணைந்த ஒன்றியம்தான் இந்தியா, என்று முதல்வர் ஸ்டாலின் அவையில் பேசினார். அவரின் பேச்சு மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. தேசிய அளவில் அவர் பேசி வீடியோ இணையம் முழுக்க பரவி விவாதங்களை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது ராகுல் காந்தியும் ஸ்டாலின் பாணியில் ஒன்றிய அரசியலை கையில் எடுத்துள்ளார்.

3 விஷயங்கள்
ராகுலின் பேச்சை தொடர்ந்து தேசிய அரசியலை ஆட்டிப்படைக்கும் சக்தியாக தமிழ்நாடு என்று வார்த்தை உருவெடுத்துள்ளது. ஆம் தமிழ்நாடு முன் வைக்கும் 3 விவாதங்கள் தேசிய அரசியலின் பாதையை தீர்மானிக்கும் விஷயமாக உருவெடுத்து வருகிறது. முதல் விஷயம் ஒன்றியம். மத்திய பாஜக அரசு மாநிலங்களை வஞ்சிப்பதாகவும், மாநில உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறிப்பதாகவும் புகார் வைக்கப்படும் நிலையில்தான் தற்போது இந்த ஒன்றியம் என்ற வார்த்தை மிக முக்கியமான அரசியல் கொள்கையாக உருவெடுத்துள்ளது. இந்த விவாதத்தை தொடங்கி வைத்தது தமிழ்நாடுதான்.

நீட்
அதேபோல் ராகுல் காந்தி பேசிய நீட் அரசியல் இப்போது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாடு எம்பிக்கள் மட்டுமே பேசி வந்த நீட் எதிர்ப்பை கடந்த சில மாதங்களாக தெலுங்கானா, மேற்கு வங்க எம்பிக்களும் பேசி வருகிறார்கள். பல மாநிலங்களில் நீட் எதிர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் நீட் எதிர்ப்பை தேசிய அளவில் ராகுல் காந்தியும் கொண்டு சென்று இருக்கிறார். வரும் நாட்களில் நீட் எதிர்ப்பு இதனால் தீவிரம் அடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக நீதி அரசியல்
இது போக தமிழ்நாட்டின் அரசியல் கொள்கையாக இருக்கும் சமூக நீதி அரசியல், தேசிய அளவில் கவனம் பெற தொடங்கி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி இருக்கும் அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பு காரணமாக ஒரு பக்கம் தேசிய அளவில் இதன் மீதான கவனம் அதிகரித்துள்ளது. அதேபோல் மருத்துவ படிப்புகளில் ஓபிசி இடஒதுக்கீட்டுக்காக தமிழ்நாடு அரசு சட்ட போராட்டம் நடத்தியது. அதில் வெற்றியும் பெற்றது. இது வடஇந்திய ஓபிசி பிரிவினர் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மண்டல் அரசியல்
அதற்கு பீகார், உ . பி உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் தமிழ்நாடு அரசின் இந்த சட்ட போராட்டம் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இப்போது உ.பி தேர்தலில் ஓபிசி பிரிவினர் கவனம் பெறவும் மண்டல் அரசியலே காரணம். அம்மாநிலங்களில் மீண்டும் மண்டல் அரசியல் தலைதூக்க தொடங்கி உள்ளது. இதுவும் தமிழ்நாடு தொடங்கி வைத்த விவாதம்தான்... தமிழ்நாடு முன் வைக்கும் இந்த 3 விஷயங்கள் தற்போது தேசிய அளவில் மாபெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது... தேர்தல் முடிவுகளை மாற்றும் சக்தியாக இந்த விவாதங்கள் உருவெடுத்து வருகின்றன இந்தி எதிர்ப்பு தொடங்கி.. இடஒதுக்கீடு வரை பல விஷயங்களுக்கு முன்னோடியாக இருந்தது தமிழ்நாடுதான்.. இப்போது மீண்டும் மாபெரும் விவாதத்தை தமிழ்நாடு தொடங்கி வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications