அதிமுக மா.செ வீட்டில் இந்த ஒரு காரணத்துக்காகவே ரெய்டு.. எஸ்பி வேலுமணி தடதட!
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்காக பம்பரமாகச் சுழன்று வேலை பார்த்தவர்களை பழிவாங்கவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.64 கோடி சொத்து சேர்த்த வழக்கில், அதிமுக மாவட்டச் செயலாளர் தி.நகர் சத்தியா மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது. அதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷின் வீடு உட்பட 22 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிமுக தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டச் செயலாளர் தி.நகர் சத்தியா (எ) சத்தியநாராயணன், கடந்த அதிமுக ஆட்சியில் 2016-21வரை தியாகராய நகர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். 2021 தேர்தலில் தோல்வியடைந்த இவர், தனது வேட்புமனுவில் சொத்து மதிப்பு ரூ.2.79 கோடி என்று தெரிவித்திருந்தார். ஆனால், ஆர்.டி.ஐ தகவல் மூலம் அவரது சொத்து மதிப்பு அதிகரித்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தி.நகர் சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆரம்பகட்ட விசாரணையை 2 மாதங்களில் முடித்து, முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யலாம் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதன் தொடர்ச்சியாக, தி.நகர் சத்தியா மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். வடசென்னை வட கிழக்கு மாவட்ட செயலாளரான ஆர்எஸ் ராஜேஷின் இல்லத்திலும் நேற்று அதிகாலை முதல் மாலை வரை கிட்டதட்ட சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஆனால் சோதனையில் ஏதும் இல்லை என விட்டு சென்றனர்.
இந்நிலையில் இன்று ஆர்எஸ் ராஜேஷின் இல்லத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி அவரைச் சந்தித்து பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்திந்த அவர், "அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களை வைத்தே திமுக ஆட்சி செய்கிறது. மதுரையில் நடைபெற்ற எழுச்சி மாநாடு இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் சரித்திர மாநாடாக நடந்தேறியது.
எப்போது சட்டமன்ற தேர்தல் நடந்தாலும் அதிமுக வெற்றி பெற்றுவிடும் என்பதாலேயே இது போன்ற சோதனைகள் நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமிக்காக பம்பரமாகச் சுழன்று வேலை செய்பவர்களை பழிவாங்கும் விதமாக இது போன்ற ரெய்டுகள் நடத்தப்படுகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மதுரையில் நடந்த அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கு சென்னையில் இருந்து தனியாக சிறப்பு ரயில் ஏற்பாடு செய்து, ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களை அழைத்துச் சென்றது அ.தி.மு.க மாவட்ட செயலாளர்களான தி.நகர் சத்யா மற்றும் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர்தான். இந்த நிலையிலேயே இதனைக் குறிப்பிட்டு, திமுக அரசு பழிவாங்குவதாக விமர்சித்துள்ளார் எஸ்பி வேலுமணி.












Click it and Unblock the Notifications