ஆசையாக இருந்தார்களே.. கிளாம்பாக்கம் போறவங்களுக்கு ஷாக்.. திடீரென வந்த சிக்கல்.. என்ன நடந்தது?
சென்னை: கிளாம்பாக்கம் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை புதிய ரயில் நிலையத்துடன் இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்கும் பணி நிலப்பிரச்சனை காரணமாக தடைபட்டு உள்ளது. தனி நில உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் எட்டப்படாததால் முடங்கியுள்ளது. இது போக்குவரத்து மையத்தின் கட்டுமானத்தை தாமதப்படுத்துவதுடன், ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு தொடர்ந்து சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்து பயணிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல, 500 மீட்டர் நீளமுள்ள இந்த ஆகாய நடைபாதை மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகளுடன் திட்டமிடப்பட்டது. ஆனால், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இத்திட்டம் முழுமையாக தடைபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளாம்பாக்கம் ரயில் நிலையம்
கிளாம்பாக்கம் ரயில் நிலையமும் இந்த முடக்கத்தால் தாமதமாகும் அச்சத்தை எதிர்கொள்கிறது. ஆரம்பத்தில் டிசம்பர் 2024-ல் திறக்க திட்டமிடப்பட்டிருந்த இந்த ரயில் நிலையம், தற்போது மார்ச் 2026-க்கு முன்னர் செயல்பட வாய்ப்பில்லை.
மூன்று நடைமேடைகளில் ஒன்று மட்டுமே நிறைவடைந்துள்ளதால், கட்டுமானப் பணிகள் மந்தமாக நடைபெறுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், வரவிருக்கும் பருவமழை கூடுதல் தாமதங்களை ஏற்படுத்தும் என்றும் அஞ்சப்படுகிறது.
ரூ. 400 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம், கோயம்பேட்டிலிருந்து வெளியூர் பேருந்து சேவைகளை இடமாற்றம் செய்து, நகர நெரிசலைக் குறைக்கும் நோக்குடன் டிசம்பர் 2023-ல் திறக்கப்பட்டது.
தினமும் 1.3 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தும் இந்த பேருந்து நிலையம், கடைசி மைல் இணைப்பு இல்லாததை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. பெரும்பாலான பயணிகள் அருகிலுள்ள தாம்பரம், வண்டலூர் போன்ற நிலையங்களில் இருந்து அதிக செலவு பிடிக்கும் ஆட்டோ ரிக்ஷாக்களை நம்பியுள்ளனர்.
கிளாம்பாக்கம் ஆகாய நடைபாதை
இந்த பிரச்சினைக்கு தீர்வாகவே ஆகாய நடைபாதை மற்றும் புதிய ரயில் நிலையம் ஆகியவை மாநில அரசால் முன்மொழியப்பட்டன. ஆகாய நடைபாதைக்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு (CMDA) ரூ. 79 கோடியும், ரயில் நிலையத்திற்காக ரயில்வே துறைக்கு மாநில அரசு ரூ. 20 கோடியும் ஒதுக்கி, தேவையான நிலத்தையும் வழங்கியுள்ளது.
பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால், பயணிகளின் போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025 பொங்கல் பண்டிகையின் போது ஏற்பட்ட கடும் சிரமங்கள் மீண்டும் தொடருமோ என பலர் அஞ்சுகின்றனர்.
நில இழப்பீடு பிரச்சினையை தீர்க்க செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தையும், சிஎம்டிஏ-வையும், கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த ரயில்வே அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க மாநில அரசையும் பயணிகள் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. தற்போதைய நிலை லட்சக்கணக்கான மக்களுக்கு தினசரி பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கிளாம்பாக்கம் வரை செல்லும் மெட்ரோ
சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டத்திற்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி அளித்து ₹1,964 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. 15.46 கி.மீ. நீளமுள்ள இத்திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பயன்பாட்டுப் பணிகளுக்கான ஆரம்பக்கட்டப் பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.
இந்த வழித்தடம், முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் நீட்டிப்பாக அமையும். முதற்கட்டத் திட்டம், சென்னை விமான நிலையத்தை வட சென்னையுடன், சென்னை சென்ட்ரல் வழியாக நீல மற்றும் பச்சை வழித்தடங்களில் இணைக்கிறது. கிளாம்பாக்கம் வரை இந்த வழித்தடம் நீட்டிக்கப்பட்டால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்னையின் அனைத்துப் பகுதிகளுடனும் இணைக்கப்படும்.
இந்த 15.46 கி.மீ. நீள வழித்தடத்தில், பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் வரை 12.64 கி.மீ. தூரத்திற்கு உயர்மட்டச் சாலையும் அமைக்கப்படவுள்ளது. இந்த நீட்டிப்புத் திட்டத்தின் மொத்தச் செலவு ₹9,335 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் உயர்மட்டச் சாலையின் கட்டுமானச் செலவு ₹2,281 கோடி அடங்கும்.
கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் (KCBT) திறக்கப்பட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகும், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்குப் போக்குவரத்து ஒரு பெரிய சவாலாக உள்ளது. தற்போது, கிளாம்பாக்கம் செல்ல எம்.டி.சி பேருந்துகள் மட்டுமே ஒரே வழி. இனி அந்த பிரச்னையை சரி செய்ய மெட்ரோ இந்த ரூட்டில் அமைக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications