தென் மாவட்ட மக்களின் பல வருட கனவு! 3-வது வழித்தடம் அமைக்க ரயில்வே திட்டம்.. எந்த ரூட்டில் தெரியுமா?
சென்னை: நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே ஒரு ரயில் பாதை மட்டுமே உள்ளது. இதனால் இங்கு எப்போது இரண்டாவது வழித்தடம் போடப்பட்டு ரயில் சேவை அதிகரிக்கப்படும் என பயணிகள் நீண்டகாலமாக எதிர்பார்த்த நிலையில் தற்போது இரண்டாவது வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது இந்த வழித்தடத்தில் மூன்றாவது பாதை அமைக்க ரயில்வே திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் மாவட்டத்தில் மிக முக்கிய வழித்தடங்களில் ஒன்றாக நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரூட் உள்ளது. தமிழகத்தையும் கேரள மாநிலத்தையும் இணைக்கும் மிக முக்கிய வழித்தடமாக இருப்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த இரு மாநிலங்களுக்கும் இடையேயும் பயணிக்கின்றன. அதேபோல, நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே 10 க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மூன்றாவது பாதை அமைக்க முடிவு
கல்வி, வேலை வாய்ப்பு, தொழில், மருத்துவம் என பல்வேறு காரணங்களுக்காகவும் தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் இதை பயன்படுத்தி வருகிறார்கள். தென் மாவட்டங்களில் எப்போதும் பிசியாக உள்ள ரயில்வே வழித்தடமாகவும் இது உள்ளது. தற்போது நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே ஒரு ரயில் பாதை மட்டுமே உள்ளது. இரண்டாவது வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மிகவும் பிசியான இந்த ரூட்டில் இரண்டாவது வழித்தடம் எப்போது முடிவு பெறும் என்று பயணிகள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், 71 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில் மூன்றாவது பாதை அமைக்க ரயில்வே திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து 23 கிமீ தொலைவில் விழிஞம் துறைமுகம் உள்ளது. இந்த துறைமுக திட்டம் சமீபத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
விரைவில் முடிவு
துறைமுகத்தில் இருந்து அதிக அளவு சரக்குகள் கொண்டு வருதல், அனுப்பி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறும். எனவே அதிக அளவில் சரக்கு ரயில்கள் இயக்கப்பட வேண்டியிருக்கும். இதனை கருத்தில் கொண்டே மூன்றாவது ரயில் பாதை அமைக்க திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. மூன்றாவது வழித்தடம் அமைப்பதற்கான சர்வே பணியை நடப்பு நிதி ஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பாதையில் முதற்கட்ட பணிகளுக்கு சொற்ப அளவிலான தொகையும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு உள்ளது.
தற்போது ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2-வது வழித்தடம் அமைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த திட்டம் முடிந்த பிறகு மூன்றாவது பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுமா? அல்லது இரண்டாவது பாதை அமைக்கும் போதே அந்த பணிகளும் சேர்த்து நடைபெறுமா? என்பது தெரியவில்லை. இது குறித்த முடிவை ரயில்வே வாரியம் விரைவில் எடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு
நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே இரு வழிப்பாதை பயன்பாட்டுக்கு வந்தால், ரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடியும் என்பதோடு, சாலைகளில் வாகன நெரிசலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல கூடுதல் பயணிகள் மற்றும் விரைவு ரயில்களை இயக்க முடியும்.
அதேபோல, திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு தற்போது அனந்தபுரி, குருவாயூர் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே தினசரி இயக்கப்படுகிறது. எனவே, இருவழிப்பாதை ஆக்கப்பட்ட பிறகு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் பயணிகளிடையே அதிகரித்து உள்ளது. சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்பதும் இரு மாநில பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
பயணிகள் எதிர்பார்க்கும் இந்த ரயில் திட்டங்கள் எல்லாம், இருவழிப்பாதை முடிந்தால் நிறைவேற்றப்பட வாயப்பு ஏற்படும். இதனால் தற்போது நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ரயில் பயணிகள் கூறியுள்ளனர். நாகர்கோவில் - கன்னியாகுமரி இடையே இரு வழிப்பாதை பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications