வானம் தந்த தானம்... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு, விட்டு மழை
Recommended Video
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் விட்டு, விட்டு பெய்து வரும் மழையால், குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெப்பச்சலனம், தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. இதேபோல், சென்னை புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து, வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, செவ்வாய்ப்பேட்டை, அயோத்தியாபட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. நகரின் பிரதான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்றுடன் பெய்த மழையால், நகரின் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடைந்தால், விவசாய பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதே போல், மதுரை, திண்டுக்கல், நாகை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வரும் மக்களுக்கு தற்போது, பெய்து வரும் மழை ஆறுதலை கொடுத்துள்ளது. மழைநீரை, குடங்களில் சேகரித்து வைத்து மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications