வீட்டிலிருந்து 2 சப்பாத்தி தான் டப்பாவில் கொண்டு வருவாரு! இறையன்பு பற்றி பேசிய ராஜகண்ணப்பன்!
சென்னை: தலைமைச் செயலாளர் இறையன்பு மிகவும் எளிமையான மனிதர் என்றும் அவரை போல் ரொம்ப சிம்பிளான அதிகாரியை பார்க்க முடியாது எனவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் சட்டசபையில் பேசியிருக்கிறார்.
இறையன்பு ஐ.ஏ.எஸ்.ஸை பொறுத்தவரை என்னதான் உயர்ந்த பதவியில் இருந்தாலும் கூட வீட்டிலிருந்து டப்பாவில் அடைத்து எடுத்து வரும் 2 சப்பாத்திகளை தான் மதிய நேரத்தில் உணவாக சாப்பிடுகிறார் என ராஜகண்ணப்பன் கூறியிருக்கிறார்.
இதில் கவனிக்க வேண்டிய விவகாரம் என்னவென்றால் இறையன்பு இருக்கும் பதவிக்கு அவர் நினைத்தால் அரசு செலவில் தினமும் வகை வகையாக லஞ்ச் சாப்பிட முடியும். ஆனால் அது போல் செய்யாமல் உச்ச பதவியில் இருப்பினும் வீட்டிலிருந்து டப்பாவில் லஞ்ச் கொண்டு வருவது மற்ற அதிகாரிகளுக்கு முன்னுதாரணமாக அமையும்.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தினம் தோறும் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன.
அந்த வகையில் நேற்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
அதில் பங்கேற்று பேசிய அத்துறையின் அமைச்சர் ராஜகண்ணப்பன், 20 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முன்னதாக அவர் பேசிய போது, தலைமைச் செயலாளரின் எளிமை குறித்து குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து முதலமைச்சரின் செயலாளர்களான உதயசந்திரன், உமாநாத், சண்முகம், அனுஜார்ஜ் ஆகியோர் பெயரை குறிப்பிட்டு பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், திடீரென எங்க துறை அதிகாரிகளை பற்றி பேசவில்லை என்றால் அப்புறம் அவங்க கோபித்துக் கொள்வார்கள் எனக் கூறி தனது துறை அதிகாரிகளின் பெயர் பட்டியலை தேடத் தொடங்கினார்.
அமைச்சர் ராஜகண்ணப்பன் கையில் வைத்திருந்த பேப்பரில் மங்கத்ராம் மிஸ்ரா ஐ.ஏ.எஸ். பெயர் மட்டும் தென்பட்டதால் அவர் பெயரை மட்டும் குறிப்பிட்ட அவர், இன்னொரு ஸ்பெஷல் அதிகாரி ஒருவர் இருந்தாரே, அவர் பெயர் என்னனு தெரியலை என வெள்ளந்தியாக சட்டசபையில் தெரிவித்தார்.

தனது துறை அதிகாரியின் பெயரை கூட அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிந்து வைத்திருக்காமல் இருப்பதை சைலண்டாக ஸ்டாலின் நோட் பண்ணினார். எந்த ரியாக்ஷனும் காட்டிக் கொள்ளவில்லை.
இதனிடையே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருக்கிறார்கள் என்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஒன்றும் பஞ்சமில்லை ஆனால் காரியம் தான் நடக்க வேண்டும் என சட்டசபையிலேயே மனதில் தோன்றியதை மறைக்காமல் பேசினார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.
ராஜகண்ணப்பனை பொறுத்தவரை 1991-1996 அதிமுக ஆட்சிக்காலத்திலேயே மிகவும் பவர்புல் துறையான பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர். அதேபோல் கள அரசியலில் பழுத்த அனுபவத்தோடு பணியாற்றக் கூடியவர்.












Click it and Unblock the Notifications