செந்தில் பாலாஜிக்கு “ஆல் இன் ஆல்”.. ராஜேஷ் லக்கானி அதிரடி மாற்றம்! அவ்வளவு நெருக்கம்.. என்னாச்சு?
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததுமே, மின் வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட ராஜேஷ் லக்கானி, மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மாற்றப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜிக்கும், ராஜேஷ் லக்கானிக்கும் இடையே நல்ல நெருக்கம் ஏற்பட்டிருந்ததன் காரணமாகவே அவர், மின் வாரிய தலைவர் பொறுப்பில் தொடர்ந்து இருந்தார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது அவர் மாற்றப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக கடந்த 2015-ஆம் ஆண்டு பொறுப்புக்கு வந்தார். மாநில தேர்தல் அதிகாரியாக பொறுப்புக்கு வந்ததுமே தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம், புதிய வாக்காளர்கள் சேர்ப்பு என தீவிரம் காட்டினார். கல்லூரிகளில் சிறப்பு முகாம் அமைத்து புதிய வாக்காளர்களைச் சேர்த்தார். 2016 சட்டமன்றத் தேர்தலின்போது பணப் பட்டுவாடா தறிகெட்டு நடந்த நிலையில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவை நிறுத்தி வைத்தார் லக்கானி. தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றிலேயே பணப் பட்டுவாடாவால் தேர்தலை நிறுத்தியது அதுவே முதல்முறை.

ராஜேஷ் லக்கானி: அதைத்தொடர்ந்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு லக்கானி பரிந்துரை செய்ததன்பேரில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நீடிக்க விருப்பம் இல்லை என மேலிடத்தில் தெரிவித்தார். பின்னர் இடைத்தேர்தல் முடிந்தபிறகே அவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். பிறகு, தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்றினார் ராஜேஷ் லக்கானி.
திமுக ஆட்சிக்கு வந்ததுமே: 2021ல் ஸ்டாலின் தலைமையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, வேகமாகச் செயல்படும் நல்ல அதிகாரிகளின் லிஸ்ட் எடுத்து, அவர்களையே முக்கிய துறைகளின் செயலர்களாக நியமித்தார் முதல்வர் ஸ்டாலின். அந்த லிஸ்ட்டின் படியே தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டார். அதன்பிறகு 2022 ஆம் ஆண்டு பல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். ராஜேஷ் லக்கானியை தலைமை செயலகத்தில் முக்கிய பொறுப்புக்கு அழைத்துக்கொள்ள முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டதாக தகவல்கள் கசிந்தன.
கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி: இதை அறிந்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆட்சிக்கு வந்தது முதல் மின்சாரத்துறையின் மீது பல விமர்சனங்கள் இருந்து வருகின்றன. இப்போதுதான் மின் உற்பத்திக்கான திட்டங்களைத் தீட்டி உற்பத்தியை அதிகரித்து வருகிறோம். இந்த நேரத்தில் ராஜேஷ் லக்கானியை மாற்றினால் பணிகள் சுணக்கமடையலாம். அவரே இந்தப் பொறுப்பில் இருக்கட்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்பட்டது. முதல்வரும், செந்தில் பாலாஜியின் வேண்டுகோளை ஏற்று, ராஜேஷ் லக்கானியையே மின்சார வாரிய தலைவராக தொடரச் செய்திருந்தார்.
அரவக்குறிச்சி பஞ்சாயத்து: 2016 தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டவர் செந்தில் பாலாஜி. அப்போது அரவக்குறிச்சி தொகுதியில் பணப் பட்டுவாடா தண்ணீராக நடந்ததே அன்று தேர்தல் நிறுத்தி வைக்கப்படக் காரணம். பின்னாளில் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்து அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ ஆனார்.
2021ல் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மின் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்ற நிலையில், அதே துறையின் தலைவராக செயல்பட்டார் ராஜேஷ் லக்கானி. இந்நிலையில் 471 சிறை வாசத்துக்குப் பிறகு மீண்டும் செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராகப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், மின் வாரிய தலைவர் பதவியில் இருந்து ராஜேஷ் லக்கானி திடீரென மாற்றப்பட்டு உள்ளார்.
திடீர் மாற்றம்: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் செயலாளராக ராஜேஷ் லக்கானி இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த மூன்றரை ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த ராஜேஷ் லக்கானி, தற்போது செந்தில் பாலாஜி மீண்டும் மின்சாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications