சிவகார்த்திகேயன் படத்துக்கு எதிர்ப்பு; டாக்டர் படத்தில் பெண்ணை இழிவு செய்து காட்சி -ராஜேஸ்வரிபிரியா
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து திரையில் ஓடிக்கொண்டிருக்கும் டாக்டர் திரைப்படத்துக்கு அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரிபிரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
டாக்டர் திரைப்படத்தில் பெண்ணை பலமற்றவளாக சித்தரித்து காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
டாக்டர் படத்திற்கு எதிர்ப்பும், விமர்சனமும் கிளம்பியிருப்பது படக்குழுவினரை கவலை கொள்ளச் செய்துள்ளது.

டாக்டர் படம்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் கடந்த 9-ம் தேதி முதல் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் ராணுவ மருத்துவராக நடித்திருக்கும் இந்தப் படத்தில் குழந்தை கடத்தல் நிகழ்வுகளை கருவாக வைத்து படம் உருவக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடும் விமர்சனம்
அவர் டாக்டர் படத்தை எதிர்த்து வெளியிட்ட பதிவு பின்வருமாறு அப்படியே, ''நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் திரைப்படத்தில் நகைச்சுவை என்னும் பெயரில் பெண்ணை இழிவு படுத்துவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. ஆண் தோற்றுவிட்டதனால் பெண் உடை அணிவித்து கோமதி என்று பெயர் சூட்டி இழிவு செய்யும் காட்சி.இன்னும் எத்தனை காலம்தான் பெண்ணை பலமற்றவளாக சித்திகரிக்க போகிறீர்கள்.''

கோபமாக
''இத்திரைப்படத்தில் சில நல்ல கருத்துக்களை கூறியிருந்தாலும் வாழை இலை போட்டு அறுசுவை உணவு படைத்து சற்று மலத்தையும் உடன் பரிமாறியதற்கு ஒப்பான செயல் ஆகும் அந்த காட்சி. கோமதிகளின் கோபம் ஒருநாள் உங்களை போன்றோரை விரைவில் சுட்டெரிக்கும்.'' இவ்வாறு தனது கோபத்தை வார்த்தைகளால் அவர் கொட்டியுள்ளார். இதனிடையே இது தொடர்பான புகாரோடு சென்னை மாநகர காவல் ஆணையரை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

2-வது முறை
இதனிடையே கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது சிவகார்த்திகேயன் ஓட்டளித்தது குறித்து சந்தேகம் கிளப்பிய ராஜேஸ்வரி பிரியா அவரை எதிர்த்து போராட்டம் நடத்துவேன் என அப்போது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. பெண்ணுரிமைக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரக்கூடிய ராஜேஸ்வரி பிரியா, பாமகவில் சிறிது காலம் இருந்துவிட்டு விலகியவர். இப்போது அனைத்து மக்கள் அரசியல் கட்சி என்ற பெயரில் அமைப்பு நடத்தி வருவதோடு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.












Click it and Unblock the Notifications