கமல் பக்கம் திரும்பும் எம்ஜிஆர் ரசிகர்கள்.. திமுகவை நோக்கி ஓடும் ரஜினி ரசிகர்கள்
சென்னை: எம்ஜிஆர் பிறந்தநாளன்று வெளியிட்ட ஒரு உருக்கமான வீடியோவால் கமல் பக்கம் எம்ஜிஆர் ரசிகர்கள் திரும்பி வரும் நிலையில் ஒரு காட்டமான அறிக்கையால் திமுகவை நோக்கி ரஜினி ரசிகர்கள் ஓடுகிறார்கள்.
எம்ஜிஆர் கொடுத்த நல்லாட்சியை தான் தருவேன் என அவ்வப்போது கூறி வந்தவர் ரஜினிகாந்த். இவர் கட்சி தொடங்கினால் அது போன்றதொரு ஆட்சியை தருவேன் என சில விழாக்களில் பிரகடனம் செய்தார்.
இந்த நிலையில் முதலில் வருவேன் என சொன்ன அவர் தனது உடல் நிலையை காரணம் காட்டி தற்போது அரசியலுக்கு வரவில்லை என தெரிவித்துவிட்டார். ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என கடந்த வாரம் சென்னையில் அறவழி போராட்டம் நடத்தினர்.
Recommended Video


காட்டமான அறிக்கை
இதற்கடுத்த நாள் ரஜினிகாந்த் ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் போராட்டம் நடத்திய ரசிகர்கள் மீது கோபத்தை கொப்பளித்தார். இதனால் ரஜினி மீண்டும் அரசியலுக்கு வர மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. இவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கையில் இத்தனை நாட்களாக மாற்று கட்சிகளுக்கு செல்லாமல் பல ரசிகர்கள் காத்திருந்தனர்.

சேர முடிவு
ஆனால் இப்போது மாற்றுக் கட்சியில் சேர முடிவு செய்துள்ளனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் டாக்டர் ஏ.ஜோசப் ஸ்டாலின், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கே.செந்தில் செல்வானந்த், தேனி மாவட்டச் செயலாளர் ஆர்.கணேசன் மற்றும் தலைமைக்குழு, தொழில்நுட்ப அணி தலைவர் கே.சரவணன், இராமநாதபுரம் மாவட்ட இணைச் செயலாளர் ஏ.செந்தில்வேல், இராமநாதபுரம் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் எஸ்.முருகானந்தம் ஆகியோர் திமுகவில் இணைந்துள்ளனர்.

சென்னை முகவரி
தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக இருந்த ஏ. ஜோசப் ஸ்டாலினின் சென்னை முகவரியில்தான் ரஜினி தன் கட்சியை பதிவு செய்து வைத்ததாக முதலில் தகவல் வெளியானது. தற்போது இவர் உள்பட 4 மாவட்ட செயலாளர்கள் விலகிய செய்தி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பணிகள்
ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் மன்றத்தை வலுப்படுத்த பல்வேறு பணிகளை செய்து வந்தனர். இந்த நிலையில் இவர்களது விலகல் மற்ற நிர்வாகிகளை கொதிப்படைய செய்துள்ளது. அதிலும் ரஜினி மக்கள் மன்ற தலைமையிடம் சொல்லிவிட்டுத்தான் வந்தோம் என கூறியுள்ளார்கள்.

திமுகவில் ஐக்கியம்
எம்ஜிஆர் குறித்த ஒரு குறும்படத்தை வெளியிட்டதை அடுத்து அவரது ரசிகர்கள் கமலை நோக்கி திரும்பியுள்ளனர். அது போல் ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட்டதால் ரஜினி ரசிகர்கள் திமுகவில் ஐக்கியமாக தொடங்கிவிட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications