வார்த்தையா? வாக்கா? முடிவு செய்து சொல்லுங்கள் தலைவா... மதுரையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் கதறல் போஸ்டர்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதால் பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்கள் மதுரையில் விரக்தி போஸ்டரை அடித்து ஒட்டியுள்ளனர்.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி 234 தொகுதிகளில் போட்டியிடுவேன் என அறிவித்தார். தாம் எம்ஜிஆரைப் போல நல்லாட்சியைத் தருவேன் என்றார்.
பின்னர் நான் முதல்வராக மாட்டேன்; கட்சி- ஆட்சி இரண்டும் வெவ்வேறாக இருக்கும் என கூறினார். இப்படியே ரஜினிகாந்த் அறிவித்து ஆண்டுகள்தான் ஓடினவே தவிர அவர் கட்சி தொடங்கும் அறிகுறியே இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ரஜினிகாந்த் உடல்நிலையை முன்வைத்து ஒரு கடிதம் வலம் வந்தது. இது ரஜினிகாந்த் தரப்பே பல்ஸ் பார்க்க கசியவிட்ட அறிக்கை என்றே அனைத்து தரப்பாலும் கூறப்பட்டது.

ரஜினிகாந்த் அறிக்கை
அத்துடன் ரஜினிகாந்தும் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டார். சமூகவலைதளங்களில் வெளியான கடிதத்துக்கும் தமக்கும் தொடர்பு இல்லை; ஆனால் அந்த கடிதத்தில் தமது உடல்நிலை குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துகள் உண்மை; இதனை வைத்து ஆலோசித்து அரசியல் கட்சி குறித்த முடிவை அறிவிப்பேன் என ரஜினிகாந்த் கூறினார்.

அரசியலுக்கு வரவில்லை
உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாகவே ரஜினியின் அறிக்கை பார்க்கப்பட்டது. இதனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து பல இடங்களில் ரஜினிகாந்த் ரசிகர்கள் மன்றங்களைக் கலைத்துவிட்டு திமுகவுக்கு தாவினர்.

மதுரை போஸ்டர்கள்
இந்த நிலையில் மதுரையில், நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படங்களில் வரும் வார்த்தைகளான 'காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்' 'வார்த்தையா? வாக்கா? முடிவு செய்யுங்கள்- முடிவு சொல்லுங்கள் தலைவா' என்ற வாசகங்களுடன் மதுரை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ரசிகர்கள் விரக்தி?
மாற்றத்தை எதிர்பார்க்கும் தமிழக மக்கள் என்ற வாசகங்களுடன் மதுரை மாநகர் முழுவதும் பல இடங்களில் இந்த கதறல் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இது ரஜினிகாந்த் ரசிகர்களின் விரக்தியை வெளிப்படுத்தும் விதமாகவும் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications