நெற்றியில் பட்டை! தீபாவளிக்கு வெள்ளை வேட்டி சட்டை! ரசிகர்களுக்கு பிளைன் கிஸ் கொடுத்த ரஜினிகாந்த்!
சென்னை: தீபாவளியை ஒட்டி சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு காட்சியளித்து அவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்வித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்துக்கு அவரது ரசிகர்கள் 'தலைவா ஹேப்பி தீபாவளி' என அடிவயிற்றில் இருந்து குரல் எழுப்பி வாழ்த்துக் கூறினார்.
ரசிகர்களின் தீபாவளி வாழ்த்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட ரஜினிகாந்த், அவர்களுக்கு பிளைன் கிஸ் கொடுத்துவிட்டு விறுவிறுவென வீட்டுக்குள் நடையை கட்டினார்.
சமூக விரோதிகள் புகுந்துட்டாங்க! வாயை விட்டு மாட்டிக் கொண்ட ரஜினிகாந்த்! மீண்டும் கிளம்பும் பூதம்!
தீபாவளி வாழ்த்து
ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லம் முன்பு திரளும் ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நேரில் காட்சியளித்து வாழ்த்துக் கூறுவது வழக்கம். அந்த வகையில் தீபாவளி திருநாளான இன்று, ரசிகர்கள் முன்பு காட்சியளித்த ரஜினிகாந்த் அவர்களின் வாழ்த்து மழையில் நனைந்தார். நெற்றியில் பட்டையும், வெள்ளை வேட்டி சட்டையுமாக ரசிகர்களை பார்க்க வந்த அவர் கையெடுத்து கும்பிட்டு தங்கள் அன்புக்கு நன்றி என்பதை சைகையால் உணர்த்தினார்.
பிளைன் கிஸ்
மேலும், தன்னை பார்த்ததால் ரசிகர்கள் உற்சாகத்தோடு ஆரவாரம் செய்ததை கண்ட அவர், கை அசைத்து அவர்களுக்கு வாழ்த்து பரிமாறினார். மேலும், ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் பிளைன் கிஸ் ஒன்றும் கொடுத்தார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனர். இதனிடையே ஓரிரு நிமிடங்கள் மட்டும் காட்சியளித்துவிட்டு ரஜினிகாந்த் விறுவிறுவென வீட்டிற்குள் நடையை கட்டினார். அவர் சென்றதும் ரஜினி வீட்டில் இருந்து ஒரு டிரேயில் எடுத்துவரப்பட்ட இனிப்புகள் ரசிகர்களுக்கு வழங்கப்பட்டன.
காவல்துறையினர்
காவல்துறையினருக்கு ஏற்கனவே பல பணிகளும், பணிச்சுமைகளும் உள்ள நிலையிலும் ரஜினிகாந்த் இல்லம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள். ரசிகர்கள் அதிகளவு வரத் தொடங்கியதால் தாமதம் செய்யாமல் காலை சீக்கிரமாகவே தரிசனம் கொடுத்துவிட்டார் ரஜினிகாந்த். ரஜினிகாந்துக்கு அவரது ரசிகர்கள் 'தலைவா ஹேப்பி தீபாவளி' என அடிவயிற்றில் இருந்து குரல் எழுப்பி வாழ்த்துக்கூறியது குறிப்பிடத்தக்கது.
குடும்பத்தினர்
ரஜினிகாந்தை சந்திக்க அவரது ரசிகர்கள் சிலர் மனைவி, குழந்தைகள் என குடும்பத்தினருடன் வந்திருந்ததையும் காண முடிந்தது. என்னதான் பட்டாசு வெடித்து, புத்தாடைகள் அணிந்தாலும் தங்கள் தலைவர் ரஜினிகாந்தை பார்த்தால் தான் தீபாவளி கொண்டாட்டம் முழுமை அடைவதாக தெரிவிக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.