கருணாநிதி 97-வது பிறந்த நாள்... வாழ்த்திய கமல்ஹாசன், மறந்துபோன ரஜினிகாந்த்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் 97-வது பிறந்த நாளான நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கருணாநிதியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த போதும் நடிகர் ரஜினிகாந்த் அப்படி வாழ்த்து எதுவும் தெரிவிக்கவில்லை
கருணாநிதி மறைந்தாலும் கூட அவர் தங்களுடன் இன்னமும் வாழ்வதாகவே திமுகவினர் கருதுகின்றனர். அவரது பிறந்த நாளை இதே உணர்வுடன் எழுச்சியுடன் திமுகவினர் கொண்டாடினர்.
கொரோனா லாக்டவுன் பாதிப்பு காலம் என்பதால் நலிந்தோருக்கு நலத் திட்ட உதவிகளை தமிழகம் முழுவதும் திமுகவினர் வழங்கினர். அதேநேரத்தில் மறைந்த மாபெரும் தலைவராக கருணாநிதியை, அரசியல் தலைவர்கள் பலரும் நினைவுகூர்ந்து பிறந்த நாள் வாழ்த்துகளையும் பகிர்ந்திருந்தனர்.

ட்விட்டரில் திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல். திருமாவளவன் தமது ட்விட்டர் பக்கத்தில், #ஜூன்3_முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள்: குவளையில் மலர்ந்து குவலயம் விரிந்தாய்! எழுதுகோல் எடுத்தே செங்கோல் பிடித்தாய்! நெருப்பைச் சுவைத்தே நெஞ்சுரம் வளர்த்தாய்! நெருங்கும்பகையை நெடுகிலும்சாய்த்தாய்! பக்குவம்தான்உனது படைக்கலன்! சமத்துவம்தான்உனது அடைக்கலம்! #கலைஞர் என புகழஞ்சலி கவிதை எழுதி இருந்தார்.

வாழ்த்திய கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதிக்கு வாழ்த்து பதிவிட்டிருந்தார். அதில், பகுத்தறிவை எழுத்தில் பேசி, செந்தமிழில் பெயர் சூட்டல் தொடங்கி, பேருந்தில் திருக்குறள் வரை தமிழ் ஊட்டிய அரசியல் அறிஞர் கலைஞர் அவர்களை இந்நாளில் நினைவு கூர்கிறேன். சமூக நீதியையும் வளர்ச்சியையும் தன்னால் இயன்றவரை சாத்தியமாக்கிய அரசியல் ஆளுமை அவர் என புகழஞ்சலி செலுத்தி இருந்தார்.

வாழ்த்த மறந்த ரஜினிகாந்த்
ஆனால் கருணாநிதி, தமது மரியாதைக்குரிய தலைவர் என்று எப்போதும் அழைக்கும் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து எதனையும் தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில் செம்மொழி தமிழாய்வு மையத்தின் இயக்குநரை நியமித்ததற்காக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு நன்றி கடிதம் ஒன்றை நேற்று ரஜினிகாந்த் அனுப்பி இருந்தார். இந்த கடிதத்தை ரமேஷ் பொக்ரியால் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்தார்.

கருணாநிதியால் வெற்றிடம்
ரஜினிகாந்தைப் பொறுத்தவரையில் கருணாநிதி, ஒரு மிகப் பெரும் தலைவர், மிகச் சிறந்த ஆளுமை என பல மேடைகளில் புகழ்ந்திருக்கிறார். அவரது மறைவால் தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது எனவும் பேசி வருவதுடன் இந்த வெற்றிடத்தை நிரப்ப தாமே அரசியலுக்கு வருகிறேன் என கடந்த சில ஆண்டுகளாக கூறியும் வருகிறார். இப்படி கருணாநிதியின் மீது பற்றும் பாசமும் இருக்கும் ரஜினிகாந்த், அவரது பிறந்த நாளில் வாழ்த்து கூறாமல் மறந்தது ஏனோ? என்பதுதான் பலரது கேள்வி.












Click it and Unblock the Notifications