கமலுக்கு அடிச்ச "ஜாக்பாட்".. நழுவிய ரஜினி.. அதிமுகவுக்குத்தான் இப்ப செம சிக்கல்..!
ரஜினியின் முடிவு கமலுக்கு சாதகமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது
சென்னை: ஆக, ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காத காரணத்தினால் கமலுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஒன்று தமிழக அரசியலில் அடிக்க போகிறது!
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் தமிழக அரசியலில் போக்கு ஒருமாதிரியாகவும், அவர் கட்சி ஆரம்பிக்காவிட்டால் மற்றொரு போக்கு ஏற்படும் என்று ஏற்கனவே அரசியல் நோக்கர்கள் சொல்லி இருந்தனர்.
கட்சி ஆரம்பிப்பதானால் நிச்சயம் பாஜக கூட்டணி வைக்கும், அல்லது கமல், பாமக, தேமுதிக, அமமுக, போன்றவைகளும் ரஜினியுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்பட்டது.
பாமக
இப்போது மொத்தமும் நொறுங்கிவிட்டது.. கட்சியே ஆரம்பிக்க போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.. இதனால், அதிக அளவு சாதகமான சூழல்கள் கமலுக்கே வந்து சேருகின்றன. இப்போதைக்கு அதிமுகவுடன் அதிருப்தி போக்கில்தான் பாமக உள்ளது.. ரஜினி கட்சி ஆரம்பித்தால், பாமகவின் நிறைய கோரிக்கைகளை ரஜினியை வைத்தே நிறைவேற்ற யோசித்திருந்தது.. அதற்காகவே ரஜினியின் மீதான பழைய காழ்ப்புணர்ச்சியையும்கூட மறந்து வந்தது.
கூட்டணி
இப்போது திமுகவின் கதவு அடைக்கப்பட்டு விட்டதாலும், ரஜினியும் கட்சி ஆரம்பிக்காத பட்சத்திலும், அதிமுகவுடன்தான் கூட்டணி சேர வேண்டிய நிர்ப்பந்தம் பாமகவுக்கு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை, பாமகவின் கண்டிஷன்களை அதிமுக கண்டுகொள்ளாமல் போனால், நிச்சயம் கமலுடன் பாமக கூட்டணி வைக்கவும் வாய்ப்புள்ளது. இது அத்தனையும் தேமுதிகவுக்கும் பொருந்தும்... காரணம், கமலுக்கும் - விஜயகாந்த்துக்கும் நல்ல புரிதல் உள்ளது.. நட்பு உள்ளது.. அன்பு உள்ளது..
விஜயகாந்த்
ஏற்கனவே எம்பி தேர்தலின்போது விஜயகாந்த் உடம்பு சரியில்லாத போது, வீட்டில் சென்று நேரில் பார்த்து பேசிவிட்டும் வந்தவர் கமல்.. இப்போது தேமுதிகவுக்கும் அதிமுகவுடன் சலசலப்பு உள்ளது.. சென்ற முறைவிட இந்த முறை இன்னும் மோசமான நிலைமையில் தேமுதிக கட்சி உள்ளது.. அதனால், எதிர்பார்த்த சீட்டை அதிமுக வழங்குமா என்பது தெரியவில்லை.. அந்த வகையில் கமலுடன் தேமுதிக இணைய வாய்ப்புகள் நிறையவே உள்ளது.
காங்கிரஸ்
மேலும் கம்யூனிஸ்ட் கட்சி ஆல் டைம் கமலுக்கு சப்போர்ட் என்பதால் அதில் மாற்று கருத்தே இருக்காது.. சிக்கலும் எழாது.. அதுபோலவே காங்கிரஸ் கட்சியும்.. திமுகவுடன் ஏகப்பட்ட முரண்களுடன் கூட்டணியில் பயணித்து வருகிறது.. எவ்வளவு சீட் தந்தாலும் அதை பெற்றுக் கொள்வது என்ற கட்டாயத்தில் அந்த தேசிய கட்சி உள்ளது..
திமுக
அதேசமயம், கடந்த 2 மாதமாகவே, கமலுடன் காங்கிரஸ் தரப்பில் மறைமுக பேச்சுவார்த்தையும் நடந்து வருவதாக சொல்லப்பட்டது.. எனவே, 200 தொகுதிகளிலும் திமுகதான் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுவிட்டால், கமலுடன் காங்கிரஸ் இணைய நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன. போதாக்குறைக்கு சீமானும், ஓவைசியும் இணைந்தால், கமலின் செல்வாக்கும், அங்கீகாரமும் மேலும் கூடும்.
தயக்கம்
இதில் பாஜகவை கமல் இணைத்து கொள்வாரா என்று தெரியவில்லை.. ஏற்கனவே கமலுக்கு பாஜகவின் பி-டீம் என்று ஒரு பெயர் உள்ளது.. ஒருவேளை அதுஉண்மை என்றால், பாஜக கமலுடன் இணையலாம்.. அல்லது எதிர்த்து நிற்கலாம்.. இதில் அமமுகவையும் விட்டுவிட முடியாது.. எப்படியும் அந்த கட்சி அதிமுகவுடன் இணைய போவதில்லை.. தனித்து நிற்பதற்கு கமலுடன் இணைவதில் எந்தவித தயக்கமும் இருப்பதாக தெரியவில்லை.
பெரிய மாற்றம்
அதனால், எப்படி பார்த்தாலும், பாமக, தேமுதிக, நாம்தமிழர், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், அமமுக என மெகா கூட்டணி கமல் தலைமையின்கீழ் உருவானால், நிச்சயம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் உருவாகும்.. இதில் கமலின் கீழ் ஆட்சி அமையவும், ஏன் முதல்வராகவும்கூகூட வாய்ப்பு உள்ளது.. ஒருவேளை திமுகவுடன் கமல் இணைந்து தேர்தலை சந்தித்தால், அது அதிமுகவின் தோல்வியை எளிதாக்கிவிடும்.
ஜாக்பாட்
திமுக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும், நிச்சயம் கமல் எதிர்க்கட்சி தலைவராக உருவெடுப்பார்.. அன்று எப்படி விஜயகாந்த், ஜெயலலிதா ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவரானாரோ, அதுபோலவே கமலும் முன்னிலைக்கு வருவார்.. ஆக மொத்தம், கமல் தனியாக நின்றாலும் சரி, திமுகவுடன் சேர்ந்தாலும் சரி.. நிச்சயம் ஒரு "ஜாக்பாட்" காத்திருக்கிறது!