கொரோனா: வாழ்வாதாரம் பாதித்தோருக்கு உதவுங்கள்.. தமிழக அரசுக்கு ரஜினி கோரிக்கை
சென்னை: கொரோனா வைரஸால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித் தொகை அளித்தால் அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 176 ஆக உயர்ந்துவிட்டது. இந்த நிலையில் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள், பெரிய கடைகள், மால்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுவிட்டது.

இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள், புராதன சின்னங்கள், கோயில்கள் அருகே கடை வைத்து பிழைக்கும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா விடுமுறையால் இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இதுகுறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்துக் கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை. அரசோடு சேர்ந்து மக்களாகிய நாமும் இணைந்து கொடிய வைரஸ் பரவலை தடுக்க ஒத்துழைப்போம்.

இந்த இக்கட்டான சூழலில் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித் தொகை அளித்தால் அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள் என ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications