நீதான்யா தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர்.. இந்த நேரத்தில் இப்படியா! ஆதவ் அர்ஜுனாவால் நொந்துபோன விஜய்
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ரஜினிகாந்த்தை சீண்டிவிட்டிருப்பது அந்தக் கட்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இதனால் தவெக நிர்வாகிகளே ஆதவ் அர்ஜுனா வாயை அடக்க வேண்டும் என்று அறிவுறுத்த தொடங்கி இருக்கின்றனர்.
திமுக குடும்பத்தின் மிரட்டல் காரணமாகவே நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் இருந்து கடைசி நேரத்தில் பின் வாங்கிவிட்டதாக தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசி இருந்தார். அதுமட்டுமல்லாமல் திமுகவின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் மனவலிமை ரஜினியிடம் இல்லை என்றும், விஜய்க்கு அது அதிகமாக இருப்பதாகவும் பேசி இருந்தார்.

ஆதவ் அர்ஜுனாவின் கருத்து ரஜினிகாந்த் ரசிகர்கள் மட்டுமல்லாமல், அரசியல் கட்சியினர் மத்தியிலும் பேசுபொருளாகியது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 வாரங்களே இருக்கும் சூழலில், ரஜினி ரசிகர்களை ஆதவ் அர்ஜுனா சீண்டிவிட்டுள்ளார். இந்த விவகாரத்தை பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கையில் எடுத்தனர். விவகாரம் பெரிதான சூழலில், ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ரஜினிகாந்த், தவெகவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தை கூறி இருந்தார். அந்த அவதூறு கருத்தை கண்டித்து எனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காலம் பேசாது.. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்று கூறியுள்ளார்.
இதன் மூலமாக விஜய்க்கு எதிராக தனது ரசிகர்களை ரஜினிகாந்த் திருப்பிவிட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது ரஜினிகாந்த் காக்கா, கழுகு கதைகள் மூலமாக விஜய்யை சீண்டி இருந்தார். இதனால் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையில் மோதல் ஏற்பட்டது.
விஜய் கட்சி தொடங்கிய பின், இப்படியான மோதல்கள் குறைந்தது. இப்படியான சூழலில் தேர்தலுக்கு 35 நாட்களுக்கு முன் ரஜினிகாந்த் மற்றும் அவரின் ரசிகர்களை ஆதவ் அர்ஜுனா சீண்டி இருக்கிறார். தேர்தல் நேரத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் ஒவ்வொரு அடியையும் பார்த்து கவனமாக எடுத்து வைத்து வருகிறது. காங்கிரஸ் உடனான மோதல் ஏற்பட்ட போதும், ஸ்டாலின் வார்த்தைகளை கவனமாக கையாண்டார்.
தேர்தல் நேரத்தில் அத்தனை கட்சிகளும் ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக பேசி வருகின்றன. ஆக்ரோஷமாக பேசும் அண்ணாமலையும் கூட தனி நபர் விமர்சனங்களை குறைத்து கொண்டுவிட்டார். ஆனால் தவெகவின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளரே இப்படி வம்பிழுத்திருப்பது விமர்சனங்களை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications