நோ "காவி".. நோ "மய்யம்".. சம்மட்டி அடி தந்த ரஜினி.. இனி அவரை வைத்து அரசியல் செய்ய முடியாது!
ரஜினியை வைத்து இனி யாருமே அரசியல் செய்ய கூடாது
சென்னை: ரஜினியை வைத்து அரசியல் செய்து கொண்டிருந்த மொத்த பேருக்கும் ஒரு பெரிய சம்மட்டி அடி விழுந்திருக்கிறது.. இனி அடுத்தவர்களின் பேரையும், புகழையும் தனக்கு சாதகமாக ஆட்டையபோட நினைக்கும் சொந்த கட்சியின் மீது நம்பிக்கை இல்லாத அத்தனை பேருக்கும் இது ஒரு படிப்பினையாகும்!
ரஜினி தன் உடல் நலம் கருதி கட்சி துவக்க போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.. ஆனால், சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பாடுபட்டு, உழைத்து, அதற்கு பிறகுதான் ரஜினியால் தக்க வைக்க முடிந்தது.
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள, இன்னும் ஓபனாக சொல்ல போனால் ரஜினி மந்திர சொல்லை வைத்து பதவி, பணம் சம்பாதிக்க அலைந்த கூட்டங்களே அதிகம். ஒன்று கட்சிகள் ரீதியாக.. மற்றொன்று அவரை உசுப்பேத்திவிட்டு கட்சி ஆரம்பித்து, அதன்மூலம் லாபம் அடைய நினைத்தவர்கள்.
காமராஜர், விபிசிங், ஹெக்டே, மூப்பனார், மோடி, ரஜினி- 54 ஆண்டுகளாக அரசியலில் போணியாகாத தமிழருவி மணியன்
பாஜக
கட்சி ரீதியாக பார்த்தோமானால், பாஜகவைதான் முதலில் சொல்ல வேண்டி உள்ளது.. ரஜினிக்கு இயல்பிலேயே ஆன்மீக நாட்டம் உண்டு.. மத உணர்வுகள் மேலோங்கியிருக்கிறது.. இதைதான் பாஜக போன்ற இந்துத்துவா அமைப்புகள் பயன்படுத்தி கொள்ள முயன்றன..
இடஒதுக்கீடு
தமிழகத்தில் தந்தை பெரியாரின் பார்வையை தவிர்த்துவிட்டு யாரும் அரசியல் நடத்த முடியாது.. இடஒதுக்கீடு, மூடநம்பிக்கை, பகுத்தறிவு, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரச்சனைகள், மொழியின் மேன்மை, தொன்மை வாய்ந்த தமிழ்க்கலாச்சாரம், பண்பாட்டு பாரம்பரியம் போன்ற விஷயங்கள்தான் தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிக்கின்றன.. அந்த வகையில், இவைகளுக்கெல்லாம் ரஜினியால் ஈடுகொடுக்க முடியுமா என்ற சந்தேகம் கால் நூற்றாண்டாகவே எழுந்து வந்தது. ஆனாலும், ஏதோ ஒரு விதத்தில் ரஜினியை விரட்டி பிடித்தும் பாஜக இன்று தோன்றுள்ளது..
அர்ப்பணிப்பு
10 வருடத்துக்கு முன்பு வரை தமிழகத்தில் அவ்வளவாக பெயர் தெரியாத கட்சியாக இருந்த பாஜக, சொந்த முயற்சியாலும், மக்களுக்கு செய்த அர்ப்பணிப்பாலும், எண்ணற்ற சேவைகளாலும் கால் ஊன்ற முடியாமல் ரஜினியின் உதவியை நாடியதும், காவி சாயம் பூச முயற்சித்ததும் ஏற்க முடியாததே.
கமல்
அதுபோலவேதான் மக்கள் நீதி மய்யம்.. ரஜினி கமலின் நண்பர் என்பதை மறுப்பதற்கில்லை.. ஆனால், அத்தனை முறை கமல் பகிரங்கமாக அழைப்புவிடுத்தும், ஏன் அந்த நண்பன் பதிலளிக்கவில்லை.. பல வருட கால நண்பனின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை? என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.. அரசியல் வேறு, நட்பு வேறு என்பது தான் தமிழகத்தின் தார்மீக கணக்கு... இதுவரை யாருடனும் மய்யத்துக்கு கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு, அதிலும் மக்களுடன்தான் கூட்டணி என்று சென்ற தேர்தலில் சொல்லிவிட்டு, ரஜினியை இத்தனை முறை கமல் அழைத்தது ஏன்? ஒருவருடத்திலேயே கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் ஒன்றும் வேலைக்காகாது என்பதை கமலும் உணர்ந்துள்ளதைதான் இது பிரதிபலிக்கிறது.
கூட்டணி கட்சிகள்
இதில், பாமக, தேமுதிக அமமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளையும் இணைத்து கொள்ளலாம்.. இவர்கள் எல்லாம் ரஜினி கட்சி ஆரம்பித்தால், அவருடன் இணையலாம் என்று ஏதோ ஒரு புள்ளியில் நின்று சற்று சலனப்பட்டவர்களே.. அதை மறுக்க முடியாது.. அதனால்தான் ரஜினி வருகையை இந்த கட்சியினர் யாருமே இதுவரை காட்டமாக எதிர்த்தது இல்லை.. இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால், இவர்கள் எல்லாம் சீனியர்கள்.. பலமுறை தேர்தலை சந்தித்தவர்கள்.. லட்சக்கணக்கான தொண்டவர்களை பெற்றவர்கள்.. அப்படி இருந்தும், தங்களால் வாக்கு வங்கியை உயர்த்த முடியாமல், கட்சியே ஆரம்பிக்காத ரஜினியை நம்பி கொண்டிருந்தது எவ்வளவு பெரிய ஆச்சரிய அரசியல் இது?!
வயதானவர்
இவர்களாவது பரவாயில்லை.. ஒரு எல்லையிலேயே நின்று ரஜினி வருகையை எதிர்நோக்கி காத்திருந்தவர்கள்தான்.. ஆனால், சும்மா கிடந்த ரஜினியை உசுப்பேத்தியது ஒரு கும்பல்.. ரஜினி ஒரு நோயாளி, ரஜினி ஒரு வயதானவர், ரஜினி ஒரு மென்மையானவர் என்று தெரிந்தும், அவரை கட்சியை ஆரம்பிக்க சொல்லி வலியுறுத்தியது மனசாட்சி என்பதே இல்லாத போக்கு.. ரஜினி என்ற பிம்பத்தை வைத்து, தான் மேலே வந்துவிடலாம், தான் சம்பாதித்துவிடலாம், ஏன், தான் முதல்வராக கூட ஆகிவிடலாம் என்று மனப்பால் குடித்து கொண்டிருந்தார்கள்... அத்தனை பேருக்கும் ரஜினியின் முடிவு ஒரு சவுக்கடியாக விழுந்துள்ளது.
வாய்ஸ்
இனி ரஜினியை வைத்து அரசியல் செய்யலாம், இனி வரப் போகும் தங்களுக்கு வாய்ஸ் தருவாரா என்று எதிர்நோக்கும் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்களே.. அப்படியே ரஜினி இனி வாய்ஸ் தந்தாலும், இருக்கிற கொஞ்ச நஞ்ச மரியாதையையும் இழந்துவிட வேண்டியதுதான்!