அம்பானி வீட்டு திருமணத்தில் ஆட தெரிந்த ரஜினிக்கு.. அபலை பெண்களின் அழுகுரல் கேட்கலியோ?
சென்னை: தென்னிந்திய திரை உலகையே பிரளயம் போல புரட்டி எடுத்து வருகிறது மலையாள திரை உலகின் பாலியல் அத்துமீறல்களை அம்பலப்படுத்திய ஹேமா கமிட்டி அறிக்கை. ஆனால் தமிழ்நாட்டின் உச்சநடிகர் ரஜினிகாந்த் உட்பட பலரும், ஹேமா கமிட்டியா? அப்படின்னா என்னா? எதுவும் தெரியாதே.. என மக்களை முட்டாளாக்கும் வகையில் பேசிவருவதும் கொந்தளிப்பை உருவாக்கி இருக்கிறது.
திரைத்துறையில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் அத்துமீறல்களை பக்கம் பக்கமாக கேரளாவின் ஹேமா கமிட்டி அறிக்கை வெளிப்படுத்தி இருக்கிறது. ஹேமா கமிட்டியின் அறிக்கை தாக்கத்தால் தமிழ் திரை உலகின் இருட்டு பாலியல் வக்கிரமும் வண்டியேறிக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமா உலகின் பாலியல் அத்துமீறல்கள் பற்றி புகார் கொடுக்க நேர்ந்தால் ஆகக் குறைந்தது 500 பேராவது சிக்குவார்கள் என பொங்கி எழுகின்றனர் நடிகைகள்.

குமுறும் ராதிகா: நடிகை ராதிகா போன்றவர்கள், எங்களுக்காக நடிகர்கள் யாருமே குரல் கொடுக்க முன்வரவில்லை என கொதித்துக் கொண்டிருக்கின்றனர். மூத்த நடிகையாக இருந்த போதும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக இடைவிடாமல் பேசிக் கொண்டிருக்கிறார் நடிகை ராதிகா.
ரஜினிகாந்த் இப்படி பேசலாமா?: ஆனால் தமிழ்த் திரை உலகில் பன்னெடுங்காலமாக கொடிகட்டிப் பறக்கும் உச்சநடிகர்கள் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் ஹேமா கமிட்டி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு தெரிவிக்கும் பதில்கள், பாலியல் அத்துமீறல்களை விட மிக மோசமான கொடூரமானதாக இருக்கிறது. விமானம் ஏறிப் போய் மும்பையில் அம்பானி வீட்டு திருமணத்தில் ஜாலியாக குத்தாட்டம் போடத் தெரிந்த ரஜினிக்கு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய அப்பாவி பொதுமக்களை சமூக விரோதிகள் என சொல்லத் தெரிந்த ரஜினிகாந்துக்கு, ஹேமா கமிட்டி என்றாலே என்ன என்று தெரியாதாம். எப்படிப்பட்ட பதிலைச் சொல்கிறார் ரஜினி பாருங்கள்..
அதாவது தாம் 73 வயது முதியவராகிவிட்ட பின்னரும் கூட திரைப்படங்களில் டூயட் பாடுவதை நிறுத்தாத ரஜினிக்கு தாம் கிக் ஏறுச்சே என குத்தாட்டம் போட்டு மகிழும் திரைப்படத் துறையில் புயலைக் கிளப்பும் ஒரு விவகாரம் குறித்து எதுவும் தெரியாதாம்.. அதுவும் தம்முடன் இணைந்து நடிக்கும் நடிகைகளுக்கு நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான விவகாரத்தில் இப்படி ஓடி பதுங்கிக் கொள்ளுவதை என்னமாதிரி தனம் என விமர்சிப்பது என தெரியவில்லை.
நிச்சயம் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி ரஜினிகாந்துக்கு எதுவுமே தெரியாது என எப்படி நம்ப முடியும்? தமிழ்நாட்டு தலைவர்கள் ஜெயலலிதா, கருணாநிதி இறந்த உடனேயே ஹைய்யா வெற்றிடம் வந்துருச்சு.. எனக்குதான் முதல்வர் நாற்காலி என கனவில் மிதக்க தெரிந்த ரஜினிகாந்துக்கு ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி எதுவுமே தெரியாது என்பது மக்களையும் தம்முடைய சக நடிகைகளையும் எவ்வளவு முட்டாள் என நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அல்லவா வெளிப்படுத்துகிறது?
மருந்துக்கும் ஆறுதல் சொல்லலையே?: ரஜினிகாந்த் என்று மட்டுமல்ல.. இன்றைய முன்னணி நடிகர்கள் பலரும் கூட மருந்துக்கு, ஆறுதலுக்கு கூட பாதிக்கப்பட்ட நடிகைகளுக்காக குரல் கொடுக்காமல் போனாலும் கூட, தங்களுடைய திரையில் இப்படி ஒன்று நடந்திருக்கிறதே என்பதற்காக துளியேனும் கவலையை வெளிப்படுத்தவும் முன்வரவில்லை.. ரஜினிகாந்த் பாணியில்.. அப்படியா.. அந்த அறிக்கையா... இப்பதான் கேள்விப்படுகிறேன்.. அப்படி நடக்கக் கூடாது.. இப்படி நடக்கக் கூடாது என பம்மிப் பதுங்குகிற பேர்வழிகளாகவே இருக்கின்றனரே.. இவர்களை எந்த லிஸ்ட்டில் சேர்த்து வெளுப்பது என்பதுதான் யாருக்கும் புரியவில்லை.. இவர்களை எல்லாம் தமிழ்நாட்டு ரசிகர்கள் முற்று முழுதாகப் புறக்கணிப்பதுதான் பதிலடியாக இருக்க முடியுமே தவிர வேறு என்ன செய்ய முடியும்?












Click it and Unblock the Notifications