ராஜீவ் கொலை வழக்கு: ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் ரிலீஸ் செய்ய உத்தரவிடுங்க.. ஹைகோர்ட்டில் நளினி மனு
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் இல்லாமல், தங்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தன்டனை அனுபவித்து வரும் நளினி தாக்கல் செய்த வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்வது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

அந்த தீர்மானத்தின் மீது ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல், தங்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 2000ம் ஆண்டு தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதன் பின், 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த 3,800 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டிய ஆளுநர், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை நான்கு வாரங்களுக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications