ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும்.. நளினி & முருகன் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்
சென்னை: தாயைக் கவனித்துக் கொள்ளவும், கடந்த ஆண்டு உயிரிழந்த மாமனாருக்குச் சடங்குகளைச் செய்யவும் 30 நாட்கள் பரோல் வழங்குமாறு தமிழக முதல்வருக்கு நளினி கடிதம் எழுதியுள்ளார். அதேபோல அவரது கணவர் முருகனும் பரோல் வேண்டி கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஏழு பேரும் சுமார் 30 ஆண்டுகளாகச் சிறையில் உள்ளனர்.
அவர்களை விடுதலை செய்வது குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டும் எனக் கடந்த வாரம் தான் மு க ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.

நளினி கடிதம்
இந்நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, அவரது கணவர் முருகன் பரோல் கேட்டு கடிதம் எழுதியுள்ளனர். இது குறித்து தமிழக முதல்வருக்கும், உள்துறைச் செயலருக்கும் சிறைத் துறை மூலம் நளினி எழுதியுள்ள கடிதத்தில், "சென்னையில் உள்ள தனது தாயார் பத்மா (வயது 81) முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

30 நாட்கள் பரோல்
அவரின் அருகிலிருந்து கவனித்துக் கொள்ளவும், இலங்கையில் வசித்த தனது மாமனாரும், முருகனின் தந்தையுமான வெற்றிவேல் இறந்து ஓராண்டு ஆகிறது. அவருக்குச் சடங்குகள் செய்ய வேண்டி உள்ளது. எனவே எனக்கும், கணவர் முருகனுக்கும் 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முருகன் கடிதம்
அதேபோல முருகன் எழுதியுள்ள கடிதத்தில் "தந்தை வெற்றிவேல் கடந்தாண்டு இறந்தபோது இறுதிச்சடங்கு செய்வதற்காக பரோலில் செல்ல அனுமதி கேட்டும் வழங்கப்படவில்லை. தற்போது தந்தை இறந்து ஓராண்டுகள் ஆகிறது. எனவே அவருக்குச் சடங்குகள் செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது. இந்த கடிதங்கள் நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

பேரறிவாளன்
முன்னதாக, கடந்த வாரம் பேரறிவாளனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின், அவருக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு அளித்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications