ராஜீவ் காந்தி மாற்றத்திற்கு அடித்தளம் அமைத்த கனிமொழி.. திருச்சி மாநாட்டில் சம்பவம்! ஷாக்கில் உதயநிதி
சென்னை: திமுகவின் மாணவரணி செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி மாற்றத்திற்கு திமுக எம்பி கனிமொழி முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார். ஏனென்றால் மாணவரணி நிர்வாகிகளின் குற்றச்சாட்டுகளை கையில் எடுத்த கனிமொழி, அதனை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் வெளிப்படையாக விவரித்திருக்கிறார். இதன் பின்னரே உதயநிதியிடம் கேட்டுவிட்டு, அறிவாலயம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு பின் முக்கிய அடையாளமாக இருந்தவர் ராஜீவ் காந்தி. இதன்பின் திமுக பக்கம் சாய்ந்த ராஜீவ் காந்தி, மேடைகளில் திமுகவின் கொள்கைகளை முழங்கி வந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்திக்கு மாணவரணி செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. இதன் மூலமாக ராஜீவ் காந்தி தமிழ்நாடு முழுவதும் கூட்டங்களை நடத்தி வந்தார்.

அதேபோல் போக்குவரத்துத்துறையை முன்னதாக கையில் வைத்திருந்த அமைச்சருடன் இணைந்து தனக்கு தெரிந்த நபர்களுக்கு பல்வேறு டெண்டர்களை பெற்று கொடுத்துள்ளார். இதன்பின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோருடன் நெருக்கம் ஏற்பட்டது. இதனால் ராஜீவ் காந்தியின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது.
இப்படியான சூழலில் திமுக மாணவரணி செயலாளராக ராஜீவ் காந்தி பதவியேற்று ஓராண்டு முடிவடைந்த நிலையில், அவரது பதவியை தலைமை பறித்துள்ளது. தேர்தல் நேரத்தில் இது சர்ச்சையாகும் என்பதால், அவருக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தியின் பதவி நீக்கத்திற்கு திமுக எம்பி கனிமொழி முக்கிய காரணமாக இருந்திருக்கிறார் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
ஏனென்றால் திருச்சி மாநாட்டிற்கு முன்பாகவே ராஜீவ் காந்தி தொடர்பான புகார்கள் கனிமொழி வசம் வந்திருக்கிறது. இதுதொடர்பாக திருச்சியிலேயே ஸ்டாலினிடம் கனிமொழி பேசிய சூழலில், அந்த மாநாட்டிற்கு பின்னரும் இன்னும் கூடுதலாக சில தகவல்களை கூறி இருக்கிறார். இதன்பின் முதல்வர் ஸ்டாலின் உளவுத்துறை மூலமாக ராஜீவ் காந்தி மூலமாக ரிப்போர்ட் கொடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து கிடைத்த ரிப்போர்ட் திமுக தலைமையை ஒரு நிமிடம் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஏனென்றால் டெண்டர், ஒப்பந்தம், சிபாரிசு, பதவி, பெண்கள் விவகாரம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்திருக்கின்றன. இதனை உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்திருக்கின்றனர். இதன்பின்னரே ராஜீவ் காந்தி மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ராஜீவ் காந்தியிடம் பதவி பறிக்கப்பட்டு கனிமொழி ஆதரவாளரான ஜெ.வீரமணி என்ற பெண்ணை நியமனம் செய்துள்ளனர். ஏற்கனவே தென் மாவட்டங்களில் கனிமொழியின் வளர்ச்சி உச்சத்தில் இருக்கிறது. அவர் பின் நாடார் மற்றும் கணிசமான முக்குலத்தோர் சமூக மக்கள் திரள்வதால், திமுக தலைமையும் கனிமொழிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
இதனால் கனிமொழி சிபாரிசுகளை முதல்வர் ஸ்டாலின் பெரிதாக தட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கனிமொழி பொறுப்பாளராக இருக்கும் மாவட்டங்களுக்கு அவர் சொல்லும் வேட்பாளர்களை நியமிக்கலாம் என்று ஸ்டாலின் கூறி இருக்கிறார். தற்போது மிக முக்கியமான மாணவரணி செயலாளர் பதவியை கனிமொழி தனது ஆதரவாளருக்கு பெற்று கொடுத்திருக்கிறார். இது அறிவாலயத்திலும் பேசுபொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications