5 மாநில ராஜ்யசபா வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்.. தெலுங்கானாவில் இருந்து MP ஆகும் அபிஷேக் சிங்வி!
சென்னை: தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு உள்பட 5 மாநில ராஜ்யசபா எம்.பி பதவிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ். தெலுங்கானாவில் இருந்து அபிஷேக் மனு சிங்வி தேர்வாகிறார்.
தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களவை உறுப்பினர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளராக பதவி வகித்து வரும் கிறிஸ்டோபர் திலக், இன்று மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார்.

37 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அதற்கான மாநிலங்களவைத் தேர்தல் வரும் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், நேற்று தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதில் 28 சட்டமன்றத் தொகுதிகளும், 1 மாநிலங்களவை சீட்டும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. அந்த ஒரு உறுப்பினருக்கான வேட்பாளராக தற்போது கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டு உள்ளார். திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் போட்டியிட உள்ளதாகத் தெரிகிறது.

அதேபோல, மற்ற 4 மாநிலங்களில் காலியாகும் ராஜ்யசபா இடங்களில் 5 எம்.பி பதவிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. தெலுங்கானாவில் இருந்து அபிஷேக் மனு சிங்வி தேர்வாகிறார்.
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர்கள்
சத்தீஸ்கர் - புலோ தேவி நேதம்
ஹரியானா - கரம்வீர் சிங் பௌத்
ஹிமாச்சல பிரதேசம் - அனுராக் ஷர்மா
தெலுங்கானா - அபிஷேக் மனு சிங்வி, வேம் நரேந்தர் ரெட்டி












Click it and Unblock the Notifications