மாநில அரசியல்தானே முக்கியம்.. சட்டசபை தேர்தலில் களமிறங்கி பார்க்கலமா? அன்புமணி ராமதாஸ் ஆலோசனையாம்!
சென்னை: சட்டசபை தேர்தலில் பாமகவின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட தற்போதைய ராஜ்யசபா எம்.பி. அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்துவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த தேர்தல்களில் பாமகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் அன்புமணி ராமதாஸ். ஆனால் சட்டசபை தேர்தல்களில் பாமக தோல்வியைத் தழுவியது.
அன்புமணி ராமதாஸ் எம்பி
இதனைத் தொடர்ந்து அதிமுக அணியில் இடம்பெற்று லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார் அன்புமணி ராமதாஸ். ஆனால் அந்த தேர்தலில் அன்புமணி தோல்வியை தழுவினார். இதனையடுத்து அதிமுக ஆதரவில் ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார்.
பாமகவை தக்க வைத்த அதிமுக
தற்போது அதிமுக கூட்டணியில் பாமக முக்கியமான கட்சியாக பார்க்கப்படுகிறது. பாமகவை தக்க வைத்துக் கொள்வதில் அதிமுக தீவிரம் காட்டியது. இன்னொரு பக்கம் பாமகவிலேயே, திமுக கூட்டணிக்குப் போகலாம் என்கிற ஊசலாட்டமும் இருந்தது என்ன தகவல்கள் வெளியாகி இருந்தன.
அதிமுக அணியில் பாமக
வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக அரசு வாக்குறுதி அளித்துள்ளது. அதேபோல் பாமகவுக்கு கணிசமான தொகுதிகளையும் ஒதுக்க வாய்ப்புள்ளது. இதனால் அதிமுக கூட்டணியிலேயே பாமக தொடருகிறது.
தேர்தலில் அன்புமணி போட்டி?
இந்த நிலையில் ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு பார்க்கலாமா? என அன்புமணி ராமதாஸ் தரப்பு ஒரு ஆலோசனையை நடத்தியதாக பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமக்கு மாநில அரசியலில் இடம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற காரணத்தால் இத்தகைய ஆலோசனையில் ஈடுபட்டாராம் அன்புமணி ராமதாஸ். இந்த நிலைப்பாட்டுக்கு பாமக நிர்வாகிகளிடம் ஆதரவும் இருக்கிறதாம்.