முதலமைச்சர் பதவி... அன்புமணிக்கு ஒரு வாய்ப்பு தரலாமே... ராமதாஸ் எழுதிய மனம் திறந்த கடிதம்
சென்னை: திறமைகளின் அடிப்படையில் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர் என ஊடகங்கள் முன்மொழிந்திருக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், கருணை அடிப்படையிலோ அல்லது வேறு அடிப்படையிலோ மக்களிடம் பரிந்துரைக்க வேண்டும் என கேட்கவில்லை என்றும், திறமையை பரிசோதித்து பார்த்து பரிந்துரைத்தால் போதும் எனவும் ராமதாஸ் கூறியுள்ளார்.
தன் மீதோ, பாமக மீதோ ஏதேனும் குறைகள் இருந்தால் மின்னஞ்சல் மூலமோ, தொலைபேசி மூலமோ தொடர்பு கொண்டு ஊடகவியலாளர்கள் தாராளமாக தெரிவிக்கலாம் என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு அவர் எழுதியுள்ள மனம் திறந்த கடிதத்தில்;

துணை நிற்கவும்
தமிழகத்தை பின்னடைவுகளில் இருந்து மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்து செல்வதற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பயணத்தில் ஊடகங்கள் உறுதியாக துணை நிற்க வேண்டும் என வேண்டுவதாக தெரிவித்துள்ளார். தன்னை பொறுத்தவரை செய்தியாளர்களிடம் எப்போதும் நல்லுறவை பேணி வருவதாகவும், ஒரே ஒரு முறை தி டெலிகிராப் பத்திரிகையாளர் குதர்க்கமான கேள்வி எழுப்பியதால் சற்று கடுமையாக பதில் அளிக்க நேரிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மற்றபடி ஊடகத்துறையினருடனான நட்பு நெருக்கமாக உள்ளதாக கூறியுள்ளார்.

ராமதாஸ் புகழாரம்
உலகில் எந்த ஆட்சியாளருக்கும், ஆயுதங்களுக்கும் இல்லாத சக்தி ஊடகங்களுக்கு உண்டு என்றும், ஆயுதங்களாலும், அதிகார வலிமைகளாலும் சாதிக்க முடியாத விஷயங்களை கூட ஊடகங்கள் சாதிக்கும் என புகழாரம் சூட்டியுள்ளார். பாமக தமிழ்நாட்டை ஆண்டால் அது எந்தளவுக்கு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்பதை தமிழக மக்களுக்கு சொல்லும் கடமை ஊடகங்களுக்கு உண்டு எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டுக்கு எது நன்மை என மக்களுக்கு பரிந்துரைக்க வேண்டியது ஊடகங்களின் கடமை என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தகுதியானவர் அன்புமணி
உக்ரைனிலும், நியூசிலாந்திலும், டெல்லியிலும் படைக்கப்பட்ட வரலாறு தமிழகத்திலும் படைக்கப்பட வேண்டுமானால் அது ஊடகங்களின் கைகளில் தான் உள்ளது எனக் கூறியுள்ளார். 2016-ம் ஆண்டே திறமைகளின் அடிப்படையில் அன்புமணி ராமதாஸ் முதல்வர் பதவிக்கு தகுதியானவர் என ஊடகங்கள் முன் மொழிந்திருக்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விவாதம் தேவை
தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கும் அனைவரையும் அழைத்து தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் வளர்ச்சிக்காகவும் என்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள் என விவாதம் நடத்த ஊடகங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். ஊடகங்களால் ஏற்பாடு செய்யப்படும் விவாதத்தில் வெற்றி பெறும் வேட்பாளரை ஊடகத்துறை முன்னிறுத்தலாம் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இப்படி செய்தால் இது உலக அளவில் முன் மாதிரியாக இருக்கும் என தாம் நம்புவதாக தனது கடிதத்தில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications