தமிழை பார்த்தேன் என யாராவது சொன்னால்.. ரூ 5 கோடி பரிசு தருகிறேன்.. பாமக ராமதாஸ் அறிவிப்பு
தமிழை தேடி விழிப்புணர்வு பயணத்தில் பாமக ராமதாஸ் பேச்சு
சென்னை: தமிழை பார்த்தேன் என யாராவது சொன்னால் நான் அவர்களுக்கு ரூ 5 கோடி பரிசு தருகிறேன் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து மதுரை வரை தமிழைத் தேடி எனும் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தொடங்கியுள்ளார். இன்று முதல் 8 நாட்களுக்கு இந்த பயணம் தொடர்கிறது.
திண்டிவனம், புதுவை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, திண்டுக்கல் வழியாக பயணித்து 28 ஆம் தேதி மதுரையில் தனது பயணத்தை நிறைவு செய்கிறார். இந்த பிரச்சாரம் குறித்து ராமதாஸ் கூறுகையில் தமிழ்நாட்டில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதுதான் ஒரு காலத்தில் முழக்கமாக இருந்தது.

தமிழ் எங்கே
ஆனால் இன்று தமிழ் எங்கே என கேட்கும் நிலை உருவாகியிருக்கிறது. தமிழ்நாட்டின் பள்ளிக் கூடங்களில் தமிழ் இல்லை, ஆலயங்களில் தமிழ் இல்லை, உயர்நீதிமன்றத்தில் தமிழ் இல்லை, வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் இல்லை. வீடுகளில் கூட தமிழ் இல்லை. தாய்க்கும் குழந்தைக்குமான உரையாடல்களில் கூட தமிழ் இல்லை.

தமிழை பயிற்றுமொழி
தமிழ்நாட்டின் பள்ளிகளில் தமிழை பயிற்றுமொழியாக்கி சட்டம் இயற்ற வேண்டும். பள்ளிகளில் தொடங்கி கோயில்கள் வரை எல்லா இடங்களிலும் தமிழே ஆட்சி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திதான் இன்று முதல் சென்னையில் தமிழை தேடி என்ற பரப்புரை மேற்கொள்கிறேன் என்றார்.

வள்ளுவர் கோட்டம்
இந்த பயணம் வள்ளுவர் கோட்டத்தில் இன்று தொடங்கியது. இந்த விழாவில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக முன்னாள் தலைவர் ஜிகே மணி, முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ராமதாஸ் பேசுகையில் தமிழை பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்களில் எங்காவது பார்த்தேன் என யாராவது கூறினால் அவருக்கு நான் 5 கோடி ரூபாய் பரிசு தருகிறேன்.

தமிழ் இருக்கு
தமிழ் இருக்கு என யாராலும் சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம். தமிழை பாதுகாக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றாலும் அதை செய்வோம். நாங்கள் செய்யாதது ஏதேனும் இருக்கிறதா என ராமதாஸ் கேள்வி எழுப்பினார். அப்போது தொண்டர்கள் உற்சாகமடைந்து கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

பாமக ராமதாஸ்
பாமக ராமதாஸும் அவரது மகனும் மாநிலங்களவை எம்பியுமான அன்புமணி ராமதாஸும் தமிழக மக்கள் நல திட்டங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். அண்மையில் 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை காக்கவும் என்எல்சியை வெளியேற்றவும் வலியுறுத்தி நடைபயணத்தை என்எல்சியை கண்டித்து அன்புமணி ராமதாஸ் கடந்த மாதம் தொடங்கியிருந்தார்.

காவிரி உபரி நீர் திட்டம்
அது போல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தக் கோரி டெல்டா மாவட்டங்களில் 3 நாட்கள் நடைபயணத்தையும் அன்புமணி தொடங்கியுள்ளார். ஒகேனக்கல் தொடங்கி பொம்மிடி வரை பென்னாகரம், அரூர் உள்ளிட்ட 30 ஊர்கள் வழியாக காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்தக் கோரி அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கான இந்த திட்டத்தை செயல்படுத்தவும், மாவட்ட மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நடைபயணத்தை ஒகேனக்கலில் தொடங்கினார்.












Click it and Unblock the Notifications